Cockroaches Assemble... ரெடியாகும் ஜந்தர் மந்தர் சீசன் 2... அபிஜீத் தீப்கே அறிவிப்பு...!

டெல்லியில் ‘ஜந்தர் மந்தர் சீசன் 2’ என்ற பெயரில் இரண்டாம் கட்ட போராட்டம் விரைவில் தொடங்கும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (CJP) நிறுவனர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.

Aug 13, 2026 - 11:00
Cockroaches Assemble... ரெடியாகும் ஜந்தர் மந்தர் சீசன் 2... அபிஜீத் தீப்கே அறிவிப்பு...!

கடந்த மாதம் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளை முன்வைத்து சிஜேபி சார்பில் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்பட்டது. மாணவர்கள் மற்றும் வேலைவாய்ப்பு தேர்வர்களின் பிரச்சினைகளை முன்னிறுத்திய இந்த போராட்டம் மத்திய அரசுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியது. இதன் பின்னர் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். 

இந்த நிலையில், டெல்லியில் சிஜேபி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கூட்டத்தை நடத்துவதற்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாக கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே குற்றம்சாட்டியுள்ளார். டெல்லி நாராயணா பகுதியில் கூட்டம் நடத்துவதற்காக அரங்கு ஒன்று முன்பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும், நிகழ்ச்சி நடைபெறவிருந்த நிலையில் அரங்க உரிமையாளர் கடைசி நேரத்தில் முன்பதிவை ரத்து செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மாற்று இடங்களைத் தேடியபோதும் இதேபோன்ற சூழல் ஏற்பட்டதாகவும் தீப்கே கூறியுள்ளார். அரசியல் மேலிடத்தின் அழுத்தம் இருப்பதாக சில அரங்க உரிமையாளர்கள் தெரிவித்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஒரு அரங்கில் கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், நிகழ்ச்சி நாளன்று காலை அதன் உரிமையாளருக்கு மிரட்டல் வந்ததாகவும் தீப்கே தெரிவித்துள்ளார். சிஜேபி கூட்டத்திற்கு அனுமதி அளித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும், தலைகீழாக தொங்கவிடப்படுவீர்கள் எனவும் மிரட்டப்பட்டதாக அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கிடையே, சிஜேபி சார்பில் சுதந்திர தினம் முதல் கல்வி தொடர்பான பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளித்து நாடு முழுவதும் மக்களை சந்திக்கும் பிரசாரம் மற்றும் ‘Listening Tour’ நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அக்கட்சியின் முதன்மை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜந்தர் மந்தரில் அடுத்தகட்ட போராட்டம் எப்போது தொடங்கும் என சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், ‘சீசன் 2’ போராட்டம் மிக விரைவில் தொடங்கும் என அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார். எனினும், போராட்டத்திற்கான தேதி மற்றும் குறிப்பிட்ட கோரிக்கைகள் குறித்த முழுமையான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டத்தை முன்னெடுக்க சிஜேபி தயாராகி வருவதாக வெளியாகியுள்ள தகவல், டெல்லி அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow