மறுசீரமைப்பில் தீவிரம் காட்டும் திமுக… 76 தலைமைக் கழக பிரதிநிதிகள் நியமனம்!

திமுக அமைப்பு ரீதியான மறுசீரமைப்பு பணிகளை தீவிரப்படுத்தும் வகையில், 76 தலைமைக் கழக பிரதிநிதிகளை கட்சித் தலைமை நியமித்துள்ளது.

Sep 1, 2026 - 18:30
மறுசீரமைப்பில் தீவிரம் காட்டும் திமுக… 76 தலைமைக் கழக பிரதிநிதிகள் நியமனம்!

திமுக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், கட்சியின் அமைப்பு மாவட்டங்களின் எண்ணிக்கை 110 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கட்சியின் பல்வேறு நிலைகளில் உள்ள நிர்வாக அமைப்புகளை மறுசீரமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

இதற்காக, கட்சியின் சீரமைப்புக் குழு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பகுதி, நகரம், ஒன்றியம், பேரூராட்சி, வட்டம் மற்றும் கிளைக் கழகங்கள் மறுசீரமைக்கப்பட உள்ளன. 

இந்நிலையில், இந்தப் பணிகளை ஒருங்கிணைத்து கண்காணிப்பதற்காக ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்கும் இரண்டு பேர் என்ற அடிப்படையில் மொத்தம் 76 தலைமைக் கழக பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் நடைபெறும் மாவட்டச் செயற்குழு கூட்டங்கள் அனைத்திலும், சம்பந்தப்பட்ட தலைமைக் கழக பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மறுசீரமைப்பு தொடர்பாக கட்சியினருக்கு ஏதேனும் கருத்து அல்லது மாற்றுக் கருத்துகள் இருந்தால், அவற்றை அந்தந்த மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளிடம் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த மறுசீரமைப்பு பணிகள் குறித்து தலைமைக் கழக பிரதிநிதிகளுடன் திமுக தலைவர் தலைமையில் செப்டம்பர் 2-ம் தேதி மாலை 5 மணிக்கு காணொலிக் கூட்டம் நடைபெற உள்ளது.

வரவிருக்கும் அரசியல் சூழலை கருத்தில் கொண்டு, அடிமட்ட அமைப்புகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் திமுக இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow