திமுக-பாஜக கூட்டணி அமையுமா ? ..... உண்மையை உடைத்த வானதி சீனிவாசன் !
திமுக-பாஜக கூட்டணி அமையுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்தபிறகு தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் உள்பட பலரும் தவெகவில் இணைந்தனர். மேலும் திமுகவும் பாஜகவும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே இணையும் என்று தவெக தரப்பில் பலர் கூறி வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவை கொண்டுவர மத்திய பாஜக அரசு திட்டமிட்டு வரும் நிலையில், அந்த மசோதாவை திமுக ஆதரிக்க உள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது.
அதேவேளையில், தொகுதி மறுவரையறை மசோதாவை முழுமையாகப் படித்துப் பார்த்த பிறகே தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க முடியும் என திமுக தரப்பில் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசனிடம் திமுக-பாஜக கூட்டணி அமைய வாய்ப்புள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை” என்றும், “அது உருவாகும்போது எல்லாரும் சொல்வாங்க. அது உருவாகும் முன்பே நீங்கள் உருவாக்கிவிடுவீர்கள் போலயே” என்று வானதி சீனிவாசன் பதிலளித்தார்.
திமுகவும் பாஜகவும் அரசியல் ரீதியாக நெருங்கி வருவதாக தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு திமுக முன்னாள் எம்பி கனிமொழி சோமுவும், “அரசியலில் நிரந்தர எதிரி, நண்பர் என்று யாரும் கிடையாது. தமிழகத்துக்கு எது நல்லதோ, அது எங்கிருந்து வந்தாலும் நாங்கள் அதை கண்டிப்பாக ஆமோதிப்போம், வரவேற்போம்” என பேசியது குறிப்பிடத்தக்க ஒன்று.
இந்தச் சூழலில், திமுக-பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு வானதி சீனிவாசன் அளித்த பதில் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
What's Your Reaction?