கோவை கொலை வழக்கு: "உண்மையை மூடி மறைக்கிறதா தவெக அரசு? " எம்.பி. கனிமொழி கேள்வி !
கோவையில் தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில், இதனைத் திசைதிருப்பி தவெக அரசு உண்மையை மறைக்கிறதா? என்று எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
“அப்பாவி மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மூடி மறைக்கப் பார்க்கிறதா தவெக அரசு?” என்று கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். கோவை அருகே கைப்பேசியை பறித்துச் சென்றது தொடர்பான மோதலில் பொறியியல் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
கோவையில் தனியார் கல்லூரியில் படித்துவந்த முதலாம் ஆண்டு மாணவர், போதைப் பொருள் விற்பனை குறித்து தகவல் தெரிவித்ததற்காகப் போதை பழக்கத்தில் ஈடுபட்ட மாணவர்களால் அடித்து கொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் நிலையில், அதை மாணவர்கள் இடையேயான கோஷ்டி மோதல் என்று திசைதிருப்பும் வகையில் வழக்கை முடித்து வைக்கப்பார்க்கிறது தவெக அரசு.
கல்லூரி நிர்வாகமும் காவல்துறையும் போதைப் பொருள் விற்பனை குறித்து தகவல் அளித்த பின் பாதுகாக்கத் தவறியதால் தான், அம்மாணவர் கொலை செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் கூறும் நிலையில், பலியான அப்பாவி மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மூடி மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு?
இந்தக் கொலையைச் செய்தவர்கள் மட்டுமின்றி, பாதுகாப்பு வழங்கத் தவறிய காவல்துறையினரையும் விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?