SIR பட்டியலில் பெயர் நீக்கமா? ... பிரகாஷ் ராஜ் வெளியிட்ட வீடியோ !

எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்றபோது தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறி நடிகர் பிரகாஷ் ராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Aug 11, 2026 - 15:49
SIR பட்டியலில் பெயர் நீக்கமா? ... பிரகாஷ் ராஜ் வெளியிட்ட வீடியோ !
Prakash Raj

கர்நாடகாவில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல்களின் எஸ்ஐஆர் மறுஆய்வின்போது, வாக்காளர்கள் இல்லாதவர், இடம் மாறியவர், இறந்தவர், நகல் வாக்காளர் அல்லது பிறர் எனத் தவறாக வகைப்படுத்தப்பட்டதாகப் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், அந்தப் பட்டியலில் தனது பெயரும் இடம்பெற்றுள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்ட காணொலியின் மூலம் தெரிவித்துள்ளார்.

தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தால் நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் என வகைப்படுத்தப்பட்ட மாநிலத்தின் 65 லட்சம் வாக்காளர்களில் தானும் ஒருவர் என்று குறிப்பிட்டுள்ள பிரகாஷ் ராஜ், “நான் உங்களுடன் ஒரு நகைச்சுவையைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வாக்களிக்கும் உரிமை நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களில் நானும் ஒருவன்” என்று தெரிவித்துள்ளார்.

தான் பிறந்து, வளர்ந்து, பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வியை முடித்த பெங்களூருவின் சாந்திநகர் சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து வாக்களித்து வருவதாகவும், 2019ஆம் ஆண்டு பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்ததை நினைவுகூர்ந்த அவர், “நானும் இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேட்பாளராக இருந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “நான் என்ன செயல்முறையைப் பின்பற்ற வேண்டும் என்று பார்ப்போம். எனது வாக்காளர் அடையாள அட்டையைத் திரும்பப் பெற நான் என்னென்ன ஆவணங்களைக் காட்ட வேண்டும்? சரி, ஆட்டம் ஆரம்பம். ஒரே ஒரு வார்த்தை. என் நண்பரே, உங்களைத் தேர்ந்தெடுக்காதவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை மறுக்க உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தலாம். ஆனால் எங்களை உங்களால் தடுக்க முடியுமா?” என்று தனது 95 வினாடிகள் கொண்ட காணொலியில் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தன்னை “நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்” என்ற பிரிவின் கீழ் வகைப்படுத்திய தனது ASDDO சரிபார்ப்பு நிலையின் ஸ்கிரீன்ஷாட்டையும் அவர் பகிர்ந்துள்ளார். பல வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருந்ததாகக் கூறப்பட்ட வழக்கில், கடந்த மாதம் பிரகாஷ் ராஜ் பெங்களூரு நீதிமன்றத்தில் இருந்து ஜாமீன் பெற்றிருந்தார்.

கர்நாடகாவில், எஸ்ஐஆர் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட 1.08 கோடி வாக்காளர்கள், அதாவது 5.54 கோடி வாக்காளர்களில் 19.66 சதவீதம் பேர் ASDDO பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். பெங்களூருவில் பதிவு செய்யப்பட்ட 1.03 கோடி வாக்காளர்களில், கிட்டத்தட்ட பாதி வாக்காளர்கள், அதாவது 49 லட்சம் பேர், இந்த மாத இறுதியில் வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடிமைச் சமூகக் குழுக்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து, வாக்காளர் கணக்கெடுப்புக்கான கடைசித் தேதியை தலைமைத் தேர்தல் அதிகாரி வி. அன்புக்குமார் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நீட்டித்துள்ளார். வாக்காளர்கள் தங்களது நிலையைச் சரிபார்த்துக் கொள்ளவும், தவறாக வகைப்படுத்தப்பட்டிருந்தால் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை அணுகவும் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த நிலையில், வாக்காளர் கணக்கெடுப்புக்கான காலக்கெடு இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow