4-ம் கட்ட தேர்தல்.. அனல் பறக்கும் பரப்புரை இன்றுடன் ஓய்வு.. அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பு

May 11, 2024 - 10:03
4-ம் கட்ட தேர்தல்.. அனல் பறக்கும் பரப்புரை இன்றுடன் ஓய்வு.. அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பு

மக்களவைத் தேர்தலுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் ( மே13) நடைபெறுவதை முன்னிட்டு அனல் பறக்கும் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைகிறது.

18-வது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளிலும், மே 7-ம் தேதி 11 மாநிலங்களில் உள்ள 93 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. 

இதையடுத்து நாளை மறுநாள் ( மே 13 ) ஆந்திரா உட்பட 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் 4-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் அனல்பரக்கும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று மாலையுடன் 4-ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை ஓய்வு பெறுகிறது. 

4-ம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகள் :

ஆந்திரா – 25 தொகுதிகள்
பீகார் – 5 தொகுதிகள்
ஜார்கண்ட் – 4 தொகுதிகள்
மத்தியபிரதேசம் – 8 தொகுதிகள்
மகாராஷ்டிரா – 11 தொகுதிகள்
ஒடிசா – 4 தொகுதிகள்
தெலங்கானா – 17 தொகுதிகள்
உத்தரபிரதேசம் – 13 தொகுதிகள்
மேற்கு வங்கம் – 8 தொகுதிகள்
ஜம்மு காஷ்மீர் – 1 தொகுதி

மேலும், 4-ம் கட்ட மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா மற்றும் ஒடிசாவில் சட்டமன்ற தேர்தலும் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. ஆந்திராவில் உள்ள 175 தொகுதிகள் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ஒடிசாவில் மொத்தமுள்ள 147 சட்டமன்ற தொகுதிகளில் முதற்கட்டமாக 28 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 

4-ம் கட்ட மக்களவைத் தேர்தல் மற்றும் ஆந்திரா, ஒடிசா சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதியும், சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 6-ம் தேதியும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow