"தீவிரவாதியைப் போல் ஓடி ஒளிகிறீர்களே!" – அமைச்சர் கீர்த்தனாவை கேள்வி கேட்ட பெண் தொழிலாளி !

தீவிரவாதி போல் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறீர்களே என்று அமைச்சர் கீர்த்தனாவை சரமாரியாக கேள்வி கேட்டு பட்டாசு தொழிலாளி பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Aug 12, 2026 - 18:01
Aug 12, 2026 - 19:35
"தீவிரவாதியைப் போல் ஓடி ஒளிகிறீர்களே!" – அமைச்சர் கீர்த்தனாவை கேள்வி கேட்ட  பெண் தொழிலாளி !

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து தமிழக அரசு உத்தரவின் பேரில் ஆய்வுகள் நடத்தப்பட்ட நிலையில், 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் பல தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஆலை உரிமையாளர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்நிலையில், அமைச்சர் கீர்த்தனாவை இனி சிவகாசி ஊருக்குள் நுழைய விட மாட்டோம் என மூடப்பட்ட பட்டாசு ஆலையில் பணியாற்றி வேலை இழந்த பெண் பட்டாசு தொழிலாளி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் வெளியிட்ட வீடியோவில், அமைச்சர் கீர்த்தனாவிடம் கண்ணீர் விட்டு அழுதபடி தங்களது கஷ்டத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் கண்ணீரில் தவித்து வருவதாகவும், துன்பமும் துயரமும் நிறைந்த நிலையில் உணவிற்குக்கூட வழியில்லாமல் வட்டி கட்டி சாகிறோம் எனவும் அந்தப் பெண்மணி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், "எங்களது கண்ணீருக்கு அமைச்சர் கீர்த்தனா பதில் அளிக்க வேண்டும். வாக்கு சேகரிக்க வந்தபோது, உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருப்பேன், எல்லா மக்களுக்கும் துணையாக இருப்பேன், பணத்தை வாங்கிக்கொண்டு எனக்கு வாக்களியுங்கள் என்றெல்லாம் சொன்னீர்களே. உங்களை எங்களது பிள்ளையாக நினைத்துதான் வாக்களித்தோம். ஆனால் தற்போது எங்களது கஷ்டத்தைக் கேட்கக்கூட வராமல், தீவிரவாதி போல் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறீர்களே" என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். "கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன் என்று சொன்னீர்களே.. உங்களை எங்கு தேடினாலும் கண்ணில் தென்படுவதில்லையே.

உங்களால் ஒருநாள் சாப்பிடாமல் இருக்க முடியுமா? நாங்கள் நான்கு மாதங்களாக சாப்பிடாமல், பசி பட்டினியோடு இருக்கிறோம். உங்கள் பசியைப் போல் ஏன் ஏழைகளின் பசியைப் பார்ப்பதில்லை? பட்டாசு தொழிலாளர்கள் தங்களது பிள்ளைகளின் கல்விக் கட்டணத்தைக்கூட செலுத்த முடியாமல் தவித்து வருகிறோம்.

தங்களைப் போல் எங்கள் பிள்ளைகளையும் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு இருக்காதா? நீங்கள் மீண்டும் சிவகாசி ஊருக்கு கால் எடுத்து வைக்க வேண்டும் என்றால் பட்டாசு ஆலைகளைத் திறக்க வேண்டும். இல்லையென்றால் சிவகாசிக்குள் உங்களை நுழைய விட மாட்டோம். அவ்வளவு கொந்தளிப்பில் இருக்கும் எங்களது கண்ணீருக்கு நீங்கள் 4 நாட்களில் பதில் சொல்ல வேண்டும்" என தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow