ராகுலுக்காக குரல் கொடுக்காத திமுக? அரசியலா? அதிருப்தியா?
ராகுல் காந்தி கைது செய்யப்பட்டு காயமடைந்த விவகாரத்தில் திமுகவின் அணுகுமுறை, காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடித்திருந்த காலத்தில், ராகுல்காந்தி மீதோ அல்லது காங்கிரஸார் மீதோ இதுபோன்ற சம்பவம் நடந்திருந்தால், பாஜக மற்றும் மத்திய அரசுக்கு எதிராக திமுகவும் அதன் ஆதரவாளர்களும் தீவிரமாக குரல் எழுப்பியிருப்பார்கள், போராட்டங்களில் ஈடுப்பட்டு இருப்பார்கள் என அக்கட்சியினர் சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டெல்லியில் பிரதமர் இல்லம் முன்பு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் நீட் விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் ராகுல் காந்தியின் மூக்கில் காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்கு தவெக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், திமுக சார்பில் ராகுல் காந்தி கைது மற்றும் காயம் குறித்து தனிப்பட்ட கண்டனம் வெளியாகவில்லை. மாறாக, மாணவர்கள் மீது நடத்தப்பட்ட போலீஸ் நடவடிக்கைகள் மற்றும் நீட் எதிர்ப்பு போராட்டங்களுக்கு திமுக தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனை சுட்டிக்காட்டும் திமுக ஆதரவாளர்கள், காங்கிரஸ் கட்சி தேர்தல் முடிவுக்குப் பிறகு தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததை துரோகமாகக் கருதுகின்றனர். இதன் காரணமாகவே காங்கிரஸ் மீதான திமுகவின் அணுகுமுறை மாறியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். அதேநேரத்தில், கூட்டணி உறவைத் தொடர காங்கிரஸ் விரும்பினாலும், திமுக இதுவரை எந்த உறுதியான முடிவையும் வெளிப்படுத்தவில்லை என்றே கூறப்படுகிறது.
What's Your Reaction?