”அதிமுக-ன்ற ஒரு கட்சியே இனி இருக்காது..” – செங்கோட்டையன் பேச்சு..!
அதிமுக என்ற ஒரு கட்சி இனி இருக்கவே இருக்காது என்று அமைச்சரும் அதிமுகவின் முன்னாள் நிர்வாகியான செங்கோட்டையன் கூறியுள்ளது ரத்தத்தின் ரத்தங்களை கொதிப்படையச் செய்துள்ளது.
மதுராந்தகம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் ஏற்பாட்டில், மாற்றுக் கட்சியினர் தவெகவில் இணையும் விழா ஜூன் 15 ஆம் தேதி நடைபெற்றது. இதில் தவெக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களை வரவேற்றனர்.
அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார்.
"மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர் தொடர்ந்து அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார். வரும் தேர்தலில் அவரை அரசியல் ரீதியாக தோற்கடிக்கும் சக்தி தவெகவுக்கு உள்ளது. எடப்பாடி தொகுதியில்கூட தவெக போட்டியிட்டிருந்தால் அவருக்கு வெற்றி கிடைக்காது. திமுக - அதிமுக இணைந்து ஆட்சியை அமைக்கும் முயற்சியை முறியடிக்கும் திறன் விஜய்க்கு உள்ளது. எதிர்காலத்தில் பல எம்.எல்.ஏ.க்களும் முன்னாள் அமைச்சர்களும் தவெகவில் இணைய உள்ளனர்" என அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய செங்கோட்டையன், "42 ஆண்டுகள் கட்சிக்காக உழைத்த என்னை புறக்கணித்த நிலையில், விஜய்தான் அரவணைத்தார். பழைய நிர்வாகிகளின் பங்களிப்பை மறந்ததால் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு குறைந்து வருகிறது. அதிமுக தற்போது வீழ்ச்சி பாதையில் உள்ளது. முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலர் தவெகவில் இணையத் தொடங்கியுள்ளனர். விரைவில் தற்போதைய எம்.எல்.ஏ.க்களும் இணைய வாய்ப்புள்ளது. விரைவிலேயே அதிமுக என்ற கட்சி இருந்த இடமே தெரியாமல் போய்விடும்" எனக் கூறினார்.
What's Your Reaction?

