பரபரப்பான சாலையில் நகை வியாபாரிகளிடம் வழிப்பறி...மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு...

Mar 9, 2024 - 20:54
பரபரப்பான சாலையில் நகை வியாபாரிகளிடம் வழிப்பறி...மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு...

தஞ்சாவூரில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த சாலையில் நகை வியாபாரிகளின் முகத்தில் மிளகாய்ப் பொடியை தூவி வெள்ளி நகைகளை பறித்துச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

சென்னையை சேர்ந்த நகை வியாபாரிகளான ஆசுராம் மற்றும் கிர்தாராம் ஆகிய இருவரும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தஞ்சாவூரில் வாடகை வீட்டில் தங்கி வெள்ளி நகை வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், வழக்கம்போல் நேற்று புதுக்கோட்டையில் வெள்ளி நகைகளை விற்பனை செய்துவிட்டு மீதமுள்ள 7 கிலோ நகைகளுடன் தஞ்சாவூர் திரும்பினர். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இரவு சுமார் 9 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, அவர்களை 7 பேர் கொண்ட மர்ம கும்பல் இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து சென்றது. அப்போது தெற்கு வீதியில் வாகனத்தை வழிமறித்த மர்ம கும்பல், ஆசுராம் மற்றும் கிர்தாராம் முகத்தில் மிளகாய்ப் பொடியை தூவி 7 கிலோ வெள்ளி நகைகளை பறித்துச் சென்றது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

இதையடுத்து நகை வியாபாரிகள் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த தஞ்சாவூர் மேற்கு காவல் துறையினர் வழிப்பறி கும்பலை தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும் சாலையில், மர்மகும்பல் செய்த துணிகர வழிப்பறி சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது...

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow