கனமழை எச்சரிக்கை... எந்தெந்த மாவட்டங்களில் மழை?

இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Aug 22, 2026 - 18:51
கனமழை எச்சரிக்கை... எந்தெந்த மாவட்டங்களில் மழை?

தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் கீழடுக்கு வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, இன்று முதல் 23-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழ்நாட்டு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

வெப்பநிலை எப்படி இருக்கும்:

24 மற்றும் 25-ம் தேதிகளில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிதமான மழையும், தமிழ்நாட்டின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

21 முதல் 23-ம் தேதி வரை தமிழகத்தின் உள் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். மற்ற பகுதிகளில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்காக அறிவிப்பு:

இன்று தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கண்ட கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow