ஏமாற்றிய விஜய் ஆட்சி....மகளிர் உரிமைத் தொகை என்னாச்சு? புலம்பும் இல்லத்தரசிகள்!

மகளிருக்கான உரிமைத் தொகை ரூ 2500 தருவதாக முதலமைச்சர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது அறிவித்திருந்த நிலையில், தற்போது வரையும் இது குறித்தான எந்தவொரு அறிவிப்பும் வெளியாகமல் இருப்பது குடும்ப தலைவிகள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Aug 24, 2026 - 13:05
Aug 24, 2026 - 13:07
ஏமாற்றிய விஜய் ஆட்சி....மகளிர் உரிமைத் தொகை என்னாச்சு? புலம்பும் இல்லத்தரசிகள்!

சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் புதிதாக தொடங்கப்பட்ட தவெகவும் போட்டியிட்டது. மொத்தமுள்ள 118 தொகுதிகளில் 108 தொகுதிகளை கைப்பற்றி, நீண்ட காலமாக அரசியல் களத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த கட்சிகளை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்து தவெக ஆட்சி அமைத்தது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜய் திமுக தலைமையில் செயல்பட்டு வந்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நான் ஆட்சிக்கு வந்து விட்டால் அதனை உயர்த்தி தருவதாக அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு குடும்பத் தலைவிகள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இதற்கு முன்னதாக முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செயல்படுத்தி வந்த மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டது. ஆனால், திமுக தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், மகளிர் உரிமைத்தொகை திட்டம் கைவிடப்படுமா? அல்லது தேர்தலில் வெற்றி பெற்ற தவெக அரசு இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துமா? என்ற கேள்விகள் இல்லத்தரசிகள் மத்தியில் எழத் தொடங்கின. திமுக தரப்பிலும், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று தவெக அரசிடம் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், தவெக அரசு ஆட்சி அமைத்து 100 நாட்களைக் கடந்துள்ள நிலையில், தற்போது வரை மகளிருக்கான உரிமைத்தொகை குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தவெக அரசு வெளியிடவில்லை. இதனால் குடும்பத் தலைவிகள் மத்தியில் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி பொது நிதிநிலை அறிக்கையும், ஆகஸ்ட் 6ஆம் தேதி வேளாண்துறை சார்ந்த நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், இந்த இரண்டு அறிக்கைகளிலும் மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் இடம்பெறவில்லை. 

இதனிடையே, இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில், தேர்தல் வாக்குறுதியின்போது அறிவிக்கப்பட்ட குடும்பத் தலைவிகளுக்கான 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி, ஆண்டுக்கு 6 இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். மேலும், அதற்கான தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் வரும் பொங்கல் பண்டிகை முதல் செயல்பாட்டுக்கு வரும் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று.

இதனிடையே, மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1,000-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்று தேர்தலின்போது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது எப்போது வழங்கப்படும்? அல்லது இந்தத் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும்? என்ற பல்வேறு கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

ஒருபுறம் பெண்களுக்கான இலவச கேஸ் சிலிண்டர் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், மறுபுறம் மகளிர் உரிமைத்தொகை குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாதது குடும்பத் தலைவிகள் மத்தியில் எதிர்பார்ப்பையும் கேள்விகளையும் அதிகரித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow