தீ பற்றி எரியும் கேரள சரக்கு கப்பலில் உள்ள பொருட்கள்.. வெளியான முழு பட்டியல் இதோ!

சிங்கப்பூரைச் சேர்ந்த எம்.வி.வான் ஹாய் என்ற 503 சரக்குக் கப்பல், கேரளா அருகே தீ பிடித்த சரக்கு கப்பலில் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள், பூச்சிக்கொல்லிகள், கப்பலில் உள்ள கொள்கலன்களில் உள்ள முழுமையான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

Jun 10, 2025 - 19:41
தீ பற்றி எரியும் கேரள சரக்கு கப்பலில் உள்ள பொருட்கள்..  வெளியான முழு பட்டியல் இதோ!

சிங்கப்பூரைச் சேர்ந்த எம்.வி.வான் ஹாய் என்ற 503 சரக்குக் கப்பல், சரக்குகளை ஏற்றிக் கொண்டு, இலங்கை தலைநகர் கொழும்புவிலிருந்து மும்பை நோக்கி வந்துகொண்டிருந்தது. சுமார் 270 மீட்டர் நீளமுள்ள சரக்கு கப்பல், கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தின் பைபோர் மீன் பிடிதுறைமுகத்தில் இருந்து 78 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் வந்து கொண்டிருந்தபோது கப்பலில் இருந்த சரக்கு பெட்டிகள் வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தீ, மளமளவென மற்ற சரக்கு பெட்டிகளுக்கும் பரவியது. தீப்பிடித்து எரிந்த கப்பலில் மொத்தம் 22 பேர் இருந்த நிலையில் 18 பேரை இந்திய கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். 

காயமடைந்தவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்நிலையில் மாயமான 4 பேரை தேடும் பணியில் இந்திய கடற்படையும், கடலோர காவல் படையும் ஈடுபட்டு வருகின்றனர். கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 18 பேர் கடற்படை கப்பல் ஐஎன்எஸ் சூரத்தி மூலம் மங்களூருக்கு கொண்டு வரப்பட்டனர். காயமடைந்த அவர்களில் ஆறு பேர் மங்களூரில் உள்ள ஏ.ஜே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கேரள கடற்கரையில் தீப்பிடித்த சிங்கப்பூர் வான் ஹைய் 503 கப்பலில் மீட்புப் பணி தொடர்கிறது கப்பல் தற்போது 10 முதல் 15 டிகிரி கப்பல் சரிந்துள்ளது.கப்பலில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. 28 மணி நேரத்திற்குப் பிறகும், கப்பலில் பெரியளவில்  தீ எரிந்து கொண்டிருக்கிறது. தீப்பிடித்த கப்பல் 2240 டன் எரிபொருளை ஏற்றிச் சென்றது.

இந்தக் கப்பலில் மொத்தம் 1754 கொள்கலன்கள் உள்ளன. இவற்றில் 671 கொள்கலன்கள் கப்பலின் மேல் தளத்தில் உள்ளன. இவற்றில் 157 பொருட்கள் மிகவும் ஆபத்தான பொருட்கள். எரியக்கூடிய திட மற்றும் திரவப் பொருட்களும் கப்பலில் உள்ளன. இந்த கொள்கலன்களில் சர்வதேச கடல்சார் அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி 6.1 வகுப்பின் கீழ் வரும் பூச்சிக்கொல்லிகள் உட்பட அதிக நச்சுப் பொருட்கள் உள்ளன. 20 கொள்கலன்களில் 1.83 லட்சம் கிலோகிராம் பைபிரிடிலியம் பூச்சிக்கொல்லி உள்ளது. ஒரு கொள்கலனில் 27,786 கிலோகிராம் எத்தில் குளோரோஃபார்மேட் எனப்படும் மற்றொரு பூச்சிக்கொல்லி உள்ளது. கொள்கலன்களில் டைமெத்தில் சல்பேட் மற்றும் ஹெக்ஸாமெத்திலீன் டைசோசயனேட் போன்ற உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பிற பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயனங்களும் உள்ளன.

பென்சோபீனோன், ட்ரைக்ளோரோபென்சீன் மற்றும் 167 பெட்டி லித்தியம் பேட்டரிகள் உள்ளன, அவை சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன. எரியக்கூடிய திரவங்கள் (வகுப்பு 3) கொண்ட 40 கொள்கலன்கள் உள்ளன. எத்தனால், பெயிண்ட், டர்பெண்டைன், அச்சிடும் மை மற்றும் எத்தில் மெத்தில் கீட்டோன் ஆகியவையும் உள்ளன. 19 கொள்கலன்களில் எரியக்கூடிய திடப்பொருட்கள் உள்ளன (வகுப்பு 4.1) ஒரு கொள்கலனில் ஆல்கஹால் கொண்ட நைட்ரோசெல்லுலோஸ், 12 கொள்கலன்களில் நாப்தலீன், ஒரு கொள்கலனில் எரியக்கூடிய திரவ திடப்பொருட்கள் மற்றும் 4 கொள்கலன்களில் பாராஃபோர்மால்டிஹைடு உள்ளது. மற்றொரு கொள்கலனில் காற்றில் வெளிப்படும் போது தீப்பிடிக்கும் 4900 கிலோகிராம் இரசாயனங்கள் உள்ளன. 

இது வகுப்பு 4.2 இன் கீழ் வருகிறது, இதில் எரியக்கூடிய பொருட்கள் அடங்கும். இது தவிர, 2000 டன் கப்பல் எண்ணெய் மற்றும் 240 டன் டீசல் எண்ணெய் கப்பலில் இருப்பதும் ஆபத்தை அதிகரிக்கிறது. விபத்து நடந்த இடத்திலிருந்து கொள்கலன்கள் தெற்கு-தென்கிழக்கு திசையில் நகர வாய்ப்புள்ளது என்பது தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் ஆரம்ப மதிப்பீட்டில் உள்ளது. கொள்கலன்கள் மிக மெதுவாக நகர வாய்ப்புள்ளது என்றும், கப்பலில் இருந்து விழுந்த கண்டெய்னர்கள் அடுத்த 3 நாட்களில் கொச்சிக்கும் கோழிக்கோடுக்கும் இடையில் கரை ஓதுங்க வாய்ப்புள்ளது. கோழிக்கோடு முதல் கொச்சி வரையில் கரை ஒதுங்க வாய்ப்பு உள்ளது. கப்பலில் இருந்த 18 பேர் மீட்கப்பட்ட நிலையில் கடலில் குதித்து காணாமல்போன 4 பேரை தேடும் பணி தொடர்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow