வெறிசோடி இருந்த அதிமுக அலுவலகம் : அமாவாசையால் விருப்பமனு வாங்க குவிந்த நிர்வாகிகள்
கடந்த 3 நாட்களாக விருப்ப மனு வாங்க அதிமுக அலுவலகம் வெறிசோடி காணப்பட்ட நிலையில், இன்று அமாவாசை தினம் என்பதால் எம்ஜிஆர் மாளிகையில் விருப்ப மனு வாங்க நிர்வாகிகள் கூட்டம் அலை மோதியது.
அதிமுக சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோர், விருப்ப மனுக்களை பெறுவதற்கான பணிகள் கடந்த 15 ஆம் தேதி துவங்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் வரும் 23 ஆம் தேதி வரை, தினமும் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, ரூ.15,000-க்கு டி.டி எடுத்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முறையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிமுக தலைமை கேட்டுக் கொண்டது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறும் வகையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுகவினர், சென்னை அதிமுக தலைமை அலுவலகம் வந்து, விருப்ப மனுக்களை பெற்று பணம் செலுத்தி விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
முதல் நாளான 15-ம் தேதி 1300 பேர் விருப்ப மனு பெற்றிருந்தனர். 2ம் நாளில் வெறும் 64 பேர் மட்டுமே விருப்ப மனு பெற்றனர். மூன்றாம் நாளான நேற்று 300க்கும் குறைவான விருப்ப மனுக்களுமே பெற்றப்பட்டன. ஆனால் இன்று அமாவாசை தினம் என்பதால் அதிமுக எம்ஜிஆர் மாளிகையில் அக்கட்சி நிர்வாகிகள் விருப்ப மனு வாங்க குவிந்துள்ளனர்.
What's Your Reaction?

