தேர்தலில் சீட் வாங்கி தருவதாக காரை திருடிச் சென்ற பாஜக மாவட்ட செயலர்: போலீஸ் தேடுதல் வேட்டை
திருச்செங்கோடு தொகுதியில் வேட்பாளர் சீட் வாங்கி தருவதாக கூறி நாமக்கல் மேற்கு மாவட்ட துணை தலைவரின் காரை திருடிச் சென்ற, பாஜக மாவட்ட செயலர் உட்பட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பாஜக நாமக்கல் மேற்கு மாவட்ட ஊடகப்பிரிவு துணை தலைவர் கோகில் ஆனந்தம். அவர் நேற்று முன்தினம் இரவு சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், பாஜக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலர் பூங்குழலி என்பவர் கடந்த, 26ம் தேதி செல்போனில் தொடர்பு கொண்டு தன்னிடம் பேசினார்.
அப்போது 2026 சட்டமன்ற தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் வேட்பாளர் சீட் கிடைப்பதற்கு பாமகவைச் சேர்ந்த தமிழ்ச் செல்வி என்பவர் உதவி செய்வதாகவும் அவருக்கு தெரிந்த நபர் டெல்லியில் இருந்து சென்னை வருவதாக கூறினார். மேலும் காரை எடுத்து வாருங்கள் அவரை சென்னையில் சென்று சந்தித்து விட்டு வருவோம் என்றார். அதன்படி 27 ம் தேதி சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள சன் சில்வர் விடுதியில் இரண்டு அறைகள் முன்பதிவு செய்து வைத்திருந்தனர்.
ஆனால் அறை ஏதுவும் சரியில்லை எனக்கூறியவுடன் தனது மாருதி ஷிப்ட் காரின் சாவியை வாங்கிக் கொண்டு வேறு விடுதி பார்த்துவிட்டு வருகிறோம் எனக்கூறி தன்னை அங்கேயே விட்டுச் சென்றனர். பின் வெகுநேரமாகியும் திரும்பாததால் செல்போனில் தொடர்பு கொண்டேன். ஆனால் அவற்றிற்கும் பதில் ஏதும் கொடுக்கவில்லை. எனவே தனது காரை மீட்டு தருமாறு புகாரில் தெரிவித்து இருந்தார். புகாரின் அடிப்படையில் பெரியமேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
What's Your Reaction?

