விராலிமலை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த சி.விஜயபாஸ்கர்
விராலிமலை தொகுதி எம்எல்ஏ பதவியை சி.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் விராலிமலை தொகுதியில் போட்டியிட்டு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார். எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய விஜயபாஸ்கர். தவெக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்தார். அதுமட்டுமின்றி எஸ்.பி.வேலுமணி அணியில் சட்டசபை கொறடாவாக அங்கீகாரம் வழங்க வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில் வேலுமணி, எடப்பாடி இடையே சமரம் ஏற்பட்டு 21 எம்எல்ஏக்கள் மீண்டும் அதிமுகவில் ஐக்கியம் ஆனார்கள். ஆனால் சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் மட்டும் எடப்பாடி தலைமையில் அதிமுகவில் இணையவில்லை. இந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களாக அதிமுக தலைமைக்கு எதிராக கருத்துக்களை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் விஜயபாஸ்கர் பதிவிட்டு வந்தார்.
தலைமை என்பது அதிகாரமோ, ஆணவமோ அல்ல… ‘அர்ப்பணிப்பு மிகுந்த அரவணைப்பு’உழைக்கும் தொண்டர்களின் மனதை வெல்ல முடியாத தலைமை, மக்களின் மனதை எப்படி வெல்லும்? உணர்வுகளை மதிக்காத இடத்தில் உண்மையான பயணம் சாத்தியமா?" என்று எடப்பாடியை விமர்சனம் செய்து இருந்தார்.
இந்த நிலையில், விராலிமலை சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக சி.விஜயபாஸ்கர் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் கடிதம் அளித்து இருந்தார். இதனை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் விராலிமலை தொகுதி காலியானதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் 6 தொகுதிகள் காலியாக உள்ளன.
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ள விஜயபாஸ்கர் விரைவில் தவெகவில் இணைவார் என தெரிகிறது. விஜய் பிறந்தநாளான 22-ம் தேதி புதுக்கோட்டையில் பிரமாண்ட விழாக்களுக்கு விஜயபாஸ்கர் ஏற்பாடு செய்து இருப்பதாகவும் தெரிகிறது.
What's Your Reaction?













