2026 சட்டசபை தேர்தலுக்கு அச்சாரம்.. எடப்பாடி பழனிச்சாமிக்கு இப்பவே ஆதரவு கொடுத்த சீமான்

சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் சஸ்பெண்ட் செய்தது கண்டனத்திற்கு உரியது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் கூட்டணிக்கு அச்சாரமாக தற்போதே திமுகவிற்கு எதிரான அணிக்கு ஆதரவு தெரிவித்து பேசி வருகிறார் சீமான்.

Jun 27, 2024 - 15:59
2026 சட்டசபை தேர்தலுக்கு அச்சாரம்.. எடப்பாடி பழனிச்சாமிக்கு இப்பவே ஆதரவு கொடுத்த சீமான்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டுமென்ற அதிமுகவின் சனநாயக கோரிக்கையை நிராகரித்து, மாண்புமிகு எதிர்கட்சித்தலைவர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்குபெற முடியாதபடி திமுக அரசு இடைநீக்கம்  செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

கள்ளக்குறிச்சியில் கடந்த 19ஆம் தேதியன்று விஷ சாராயம் குடித்த 63 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக அரசு உயிரிழந்தவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரைக்கும் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சாராய மரணங்கள் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. 

இந்த சம்பவத்தை எதிர்கட்சிகளை கையில் எடுத்துள்ளனர். சட்டசபையில் விவாதம் நடத்த வேண்டும் என்று பிரதான எதிர்கட்சியான அதிமுக வலியுறுத்தியது. அதனை ஏற்க சபாநாயகர் மறுத்து விட்டார். இதனையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அமளியில் ஈடுபட்டனர். அனைரையும் வெளியேற்ற உத்தரவிட்டார் சபாநாயகர் அப்பாவு. சபை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார் சபாநாயகர். ஒருநாள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

கடந்த 6 நாட்களாகவே சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபடவே, கலகம் ஏற்படுத்த முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினார் முதல்வர் ஸ்டாலின். நேற்றும் கறுப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் கள்ளச்சாராய மரணத்திற்கு சிபிஐ விசாரணை தேவை என்று முழக்கமிட்டனர். அமளி செய்த அனைவரையும் கூண்டோடு வெளியேற்ற உத்தரவிட்ட சபாநாயகர்,அனைவரையும் சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். 

இந்த நிலையில் சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்தும்,கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பாடததை கண்டித்தும் திமுக அரசுக்கு எதிராக இன்று சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்று வருகிறது. எம்எல்ஏக்கள் அதிமுக நிர்வாகிகள் அனைவரும் கறுப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேரில் வந்து ஆதரவு கூறியதோடு, திமுக அரசுக்கு எதிராக கடுமையான கண்டனங்களை முன்வைத்தார். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்களுக்கு தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் வலைத்தள பதிவில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டுமென்ற அதிமுகவின் சனநாயக கோரிக்கையை நிராகரித்து, மாண்புமிகு எதிர்கட்சித்தலைவர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் அனைவரையும் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்குபெற முடியாதபடி திமுக அரசு இடைநீக்கம்  செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

மக்களாட்சி முறைமையைத் தகர்த்து எதிர்கட்சியினரின் குரல்வளையை நசுக்கும் திமுக அரசின்  எதேச்சதிகாரப்போக்கு அப்பட்டமான ஜனநாயகப்படுகொலையாகும். மத்திய பாஜக அரசின் சனநாயக விரோதச் செயல்பாட்டை மாறாமல் பின்பற்றும் திமுக அரசின்
இக்கொடுங்கோன்மையை எதிர்த்து   எதிர்க்கட்சித்தலைவர் ஐயா எடப்பாடி பழனிசாமி அவர்கள்  தலைமையில் சென்னையில் அதிமுகவினர் மேற்கொண்டுவரும் பட்டினி அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தமது முழு ஆதரவினைத் தெரிவித்து, சனநாயகம் தழைக்க துணைநிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
என்று சீமான் கூறியுள்ளார்.

2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து அதிமுக ரகசியமாக காய்களை நகர்த்தி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியும் தனித்து போட்டியிட்டு குறிப்பிட்ட வாக்கு சதவிகிதத்தை பெற்றுள்ளது. மாநில கட்சி அந்தஸ்தையும் பெற்றுள்ளது. இதன் காரணமாக சட்டசபை தேர்தலில் திமுகவிற்கு எதிராக பெரிய கூட்டணி அமைக்க நினைக்கும் எடப்பாடி பழனிச்சாமி நாம் தமிழர் கட்சியை இணைத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து கூறியுள்ளனர். 

அதிமுக உடன் கூட்டணிக்கு அச்சாரம் போடுவது போலவே சீமானின் சமீபத்திய செயல்பாடுகள் அமைந்துள்ளன. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. அதே நேரத்தில் பிரதான எதிர்கட்சியான அதிமுக போட்டியில் இருந்து ஒதுங்கிக் கொண்டது. அதே போல தேமுதிகவும் போட்டியில் இருந்து விலகி விட்டது. இந்த நிலையில் தானாக போய் ஆதரவு கேட்பதற்கு பதிலாக அதிமுக எம்எல்ஏக்களின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளார் சீமான். இந்த ஆதரவு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எதிரொலிக்குமா பார்க்கலாம். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow