தவெக விஜய் ஆன்மீக பயணம்: நாளை வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்கிறார்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும் என ஆன்மீக பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக நாளை வேளாங்கண்ணி, நாகூர் தர்கா சென்று சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ள உள்ளார்.
கடந்த 23-ம் தேதி தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி முதல் தேர்தலை தொடங்கியுள்ள விஜய், இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என ஆன்மீக பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 28-ந்தேதி அதிகாலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் விஜய் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு, வேல் வழங்கப்பட்டது.
அதிகாலையில் கோவில் நடை திறந்தபிறகு நடைபெற்ற விஸ்வரூப தரிசனத்தில் விஜய் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். இதை தொடர்ந்து. கடந்த 29-ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று விஜய் தரிசனம் செய்தார்.இதன் தொடர்ச்சியாக நாளை வேளாங்கண்ணி பேராலயத்திற்கு விஜய் செல்ல உள்ளார். அதிகாலை 5 மணிக்கு நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்கிறார்.
வேளாங்கண்ணியில் சிறப்பு பிரார்த்தனையை முடித்துக் கொண்டு அங்கிருந்து நாகூர் தர்காவிற்கு செல்லும் விஜய் அங்கு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட உள்ளார். இதற்காக இன்று இரவே அவர் வேளாங்கண்ணிக்கு புறப்பட இருக்கிறார். வேளாங்கண்ணியில் தனியார் சொகுசு விடுதியில் விஜய் தங்க உள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?