தன் மீதான வழக்கை ரத்து செய்ய பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மனு

தன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றில் பதிவான வழக்கை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்

Jan 16, 2024 - 18:13
Jan 16, 2024 - 19:49
தன் மீதான வழக்கை ரத்து செய்ய  பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மனு

இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகன்நாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.ஜெகநாதன், விதிகளை மீறி, அரசு அனுமதி பெறாமல், பல்கலைகழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக, சொந்தமாக பெரியார் பல்கலைகழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேசன் (PUTER Foundation) என்ற அமைப்பை தொடங்கி, அரசு நிதியை பயன்படுத்தியதுடன், பல்கலைக்கழக அதிகாரிகளைக் கொண்டே அந்த அமைப்பை செயல்படச் செய்ததாக, பல்கலைகழகத்தின் ஊழியர் சங்கத்தினர் (PUEU) காவல்துறையில் புகார் அளித்திருந்தனர். 

அதேபோல ஜாதிப்பெயரை குறிப்பிட்டு திட்டியதாக கிருஷ்ணவேணி, சக்திவேல் ஆகியோரும் துணைவேந்தருக்கு எதிராக புகார் அளித்திருந்தனர்.

இந்த புகார்களின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் கருப்பூர் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து, துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்யப்பட்ட நிலையில், சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.இந்த இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி, சேலம் கூடுதல் காவல்துறை ஆணையர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு வரும் வெள்ளிக்கிழமை(ஜனவரி 19)விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில், தனது நற்பெயரை கெடுக்கும் நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி அதை ரத்து செய்யக்கோரி ஜெகன்நாதன் மனுதாக்கல் செய்துள்ளார். அதில், துணைவேந்தராக 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பேற்றபோது நிர்வாகம் மற்றும் நிதி முறைகேடுகள் இருந்தததாகவும், அவற்றை ஒழிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ள்ளார். 

தொலைதூரக்கல்வி பிரிவில் போலி ஆவணங்கள் தயாரிப்பில் ஈடுபட்ட ஊழியர்களை இடைநீக்கம் மற்றும் பணிநீக்கம் செய்ததால் எழுந்த கடும் எதிர்ப்பையும்,  உயிருக்கு அச்சுறுத்தலையும் மீறி செயல்பட்டு  கொண்டிருப்பதாக ஜெகன்நாதன் தெரிவித்துள்ளார்.அரசின் அனுமதி இல்லாமல் ஓர் அமைப்பை (PUTER FOUNDATION) தொடங்கியதாக கூறுவது தவறு என்றும், அரசு துறைகளிடம் உரிய அனுமதியை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றின் பின்னணியில் தனக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரின் கீழ், தன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றில் பதிவான வழக்கை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வரும் வியாழக்கிழமை (ஜனவரி 18) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow