Vairamuthu: “கர்வம் தலைக்கு ஏறிடுச்சு..” வைரமுத்துவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த கங்கை அமரன்!

இசையும் கவிதையும் சேர்ந்தால் தான் பாடல் என இளையராஜாவுக்கு பதிலடி கொடுத்திருந்தார் வைரமுத்து. இதனையடுத்து வைரமுத்துவுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார் கங்கை அமரன்.

Apr 30, 2024 - 12:16
Apr 30, 2024 - 13:13
Vairamuthu: “கர்வம் தலைக்கு ஏறிடுச்சு..” வைரமுத்துவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த கங்கை அமரன்!
சென்னை: இளையராஜா – வைரமுத்து சர்ச்சையில் கங்கை அமரனும் களமிறங்கியுள்ளது கோலிவுட்டையே பரபரப்பாக்கியுள்ளது. இளையராஜாவின் இசையில் ”இது ஒரு பொன்மாலை பொழுது” என்ற பாடல் எழுதி சினிமாவில் அறிமுகமானவர் வைரமுத்து. ஆரம்பத்தில் இளையராஜா, வைரமுத்து கூட்டணி வெற்றிகரமாக வலம் வந்தாலும், ஒருகட்டத்தில் ஈகோ காரணமாக பிரிந்தனர். அதன்பின்னர் இருவரும் ஒருவரையொருவர் மறைமுகமாக தாக்கி பேசி வருவது வழக்கமாகிவிட்டது.  

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற படிக்காத பக்கங்கள் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இளையராஜாவை மறைமுகமாக விமர்சித்திருந்தார் வைரமுத்து. அதாவது, இசை பெரியதா… பாடல் பெரியதா..? என்ற விவாதம் தற்போது ரசிகர்களிடம் விவாதமாகியுள்ளது. இசையும் கவிதையும் சேர்ந்தால் தான் பாடல்; அது இல்லை என்று சொல்பவர் அஞ்ஞானி எனக் கூறியிருந்தார். மேலும், இசையும் வரிகளும் இணைந்தால் தான் நல்ல பாடல்கள் உருவாகும். ஒருவரை அவரது பெயரை வைத்து தான் பிரேமா என்றோ சங்கர் என்றோ அழைக்கிறோம். பெயரே இல்லை என்றால் எப்படி அழைப்போம், வெறும் இசை மட்டுமே இருந்தால் அந்தப் பாடலை அடையாளம் காண முடியுமோ..?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார். 
தனது பாடல்களுக்கு இளையராஜா காப்புரிமை கோரி வழக்குத் தொடர்ந்ததுக்கு எதிராக வைரமுத்து இவ்வாறு பதிலடி கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து வைரமுத்துவுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன். இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், நடிகர் என பன்முகக் கலைஞராக வலம் வருபவர் கங்கை அமரன். வைரமுத்துவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர் தற்போது பேட்டி கொடுத்துள்ளார். அதில், “எங்களால் வளர்ந்தவர், எங்களால் தூக்கிவிடப்பட்டவர், எங்களால் லிஃப்ட்ல ஏறி மேல வந்து பாட்டு எழுதினவர்; அவர் வந்த இடத்தையே காலில் மிதித்து உக்கார்ந்த இருக்கையையே தூக்கிப் போட்டு உடைத்த மாதிரி பேட்டிக் கொடுத்துள்ளார்.”
“பாரதிராஜா போய் சொல்லலன்னா இளையராஜா ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார். அதையெல்லாம் நினைத்து பார்த்திருந்தல் இப்போது இப்படியெல்லாம் பேட்டி கொடுத்திருக்கமாட்டார். அவரது பாடல்களுக்கு பாப்புலாரிட்டி கிடைத்தவுடன் வைரமுத்துவுக்கு கர்வம் தலைக்கேறிவிட்டது. இதே கர்வம் இளையராஜாவிடம் தொடர்ந்து பாட்டு எழுதியிருந்தால் வந்திருக்காது. ஏனென்றால் இருவருமே நல்ல நண்பர்களா பேசியிருப்பாங்க, பழகிருப்பாங்க, அதெல்லாம் பார்த்து நாங்களும் ரசித்திருப்போம். அப்படி இருந்த நட்பை இப்படி கொச்சைப்படுத்துவார்ன்னு எதிர்பார்க்கல.”
“இசைக்கு பாட்டா..? பாட்டுக்கு இசையா..? என பேசியிருக்கார். பாடல்களை பொறுத்தவரைக்கும் வைரமுத்து நல்ல கவிஞர் என்பதை ஒப்புக்கொள்ளலாமே தவிர நல்ல மனுசன் கிடையாது, நல்ல புத்தி கிடையாது. இனிமேல் இளையராஜா பற்றி சின்ன குறைகளோ குற்றமோ சொல்வதாக இருந்தால், அதற்குரிய விளைவுகளை வைரமுத்து வேறுமாதிரி சந்திக்க வேண்டியிருக்கும். உங்கள் பேச்சை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும், வாயை பொத்திக்கொண்டு இளையராஜா பற்றி மட்டும் பேசாமல் இருக்க வேண்டும். இளையராஜா எப்படி அவரோட வேலைய பார்த்துக்கொண்டு இருக்கிறாரோ, அதேபோல் நீங்களும் உங்கள் வேலையை பார்த்துக்கொள்ளுங்கள்” என காட்டமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். 
இளையராஜாவுக்கு வைரமுத்து பதிலடி கொடுத்தால், அவருக்கு கங்கை அமரனோ பகிரங்கமாக மிரட்டலே விடுத்துள்ளார். யாருமே எதிர்பார்க்காத இச்சம்பவத்தால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இளையராஜா – வைரமுத்து பனிப்போர் மீண்டும் தொடங்குமா, கங்கை அமரனுக்கு வைரமுத்து பதிலடி கொடுப்பாரா என்பதும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow