சித்தரின் வாழ்வில் நடந்த திருப்பம்.. பாவங்களைப் போக்கும் பகவதி அம்மன்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோயிலின் பின்னணி கதை.

பகவதி என்றதும் மலையாள தேசம்தான் பலரது நினைவில் வரும். காரணம், அம்மனை பகவதி என்ற பெயரால் அழைத்து ஆராதிக்கும் பழக்கம் அங்கேதான் அதிகம். அதேசாயம், தமிழகத்திலும் பகவதி என்ற பெயரால் அம்மனுக்கு அமைந்த கோவில்கள் சில உண்டு. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் சிவபுரம் எனும் இடத்தில் உள்ளது பகவதி அம்மனுக்கு ஒரு கோயில் உள்ளது.
இங்கே தாய் மூகாம்பிகையும், அன்னை ரேணுகா தேவியும் பகவதியுடன் எழுந்தருளியுள்ளார்கள். இக்கோயில் உருவாகக் காரணமானவர், ஒரு சித்தர். பொன்னமராவதியில் ஒரு குடும்பத்தில் குழந்தையாகப் பிறந்த அந்த சித்தர், விளையாடும் பருவமான பிள்ளைப்பருவத்திலேயே வீட்டின் பின்புறம் இருந்த வேப்பமரத்தை வணங்குவது. சுற்றிவந்து கற்பூரம் காட்டுவது என இருந்தாராம்.
பத்து வயதிலேயே பெரிய காளி படம் ஒன்றினை எங்கிருந்தோ எடுத்துவந்து வீட்டில் வைத்து வழிபடத்தொடங்கியுள்ளார். வயதுக்கு மீறிய இவரது செயல் பெற்றோருக்கும் மற்றோருக்கும் அச்சத்தை ஊட்டியிருக்கிறது. ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இவர் தேவியை வணங்குவதை மட்டுமே கடமையாகச் செய்துள்ளார்.
ஒரு கட்டத்தில் யாராவது ஏதாவது பிரச்னையில் இருப்பது தெரிந்தால், அவர்களுக்கு இவர் தீர்வு சொன்னதைக் கேட்டு அதிசயித்திருக்கிறார்கள். இதையடுத்து பலரும் வந்து தங்கள் பிரச்னைகனைச் சொல்ல அவர்களுக்கு இவர் சொன்ன வாக்குகள் பலித்துள்ளன. அப்போதுதான் இவருக்குள் ஒரு சித்தரின் அம்சங்கள் நிறைந்திருப்பதை உணர்ந்துள்ளனர். யாரிடமும் கற்றுக்கொள்ளாமலே சோழி போட்டுப் பார்த்து பிரசன்னம் சொல்வது, கட்டங்கள் வரைந்து பரிகாரம் சொல்வது இப்படி இவர் அடுத்தடுத்து செய்ய பலரும் இவரைத் தேடி வரத்தொடங்கியுள்ளனர்.
சதுரகிரி பயணம்.. கொடுத்த திருப்பம்
இந்த நிலையில் எதிர்பாராவிதமாக குடும்பத்தைக் காக்கும் பொறுப்பு இவர் தலையில் விழுந்துவிட அதுவரை பக்தர்கள் அளித்த காணிக்கைகளை மறுத்துவந்த இவர், வேறு வழி இன்றி அவற்றைப் பெற்றுக்கொள்ள ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் தேவியை எவ்வளவு காலம் மரத்தின் அடியிலேயே வைத்திருப்பது. அவளுக்கென்று ஓர் ஆலயம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள்ளும், பக்தர்களுக்குள்ளும் எழ அம்மனிடமே அதுகுறித்துக் கேட்டுள்ளார். அம்மனின் உத்தரவு கிட்டவே அதன் பிறகான முயற்சியில் தோன்றியதுதான், தற்போதுள்ள கோயில்.
அம்மனை மட்டுமே ஆராதித்து வந்தாலும் அவருக்கு ஒரு பழக்கம் இருந்தது. அது மாதம் ஒருமுறை சதுரகிரி சென்று சித்தர்களின் குருவான அகத்தியரை தரிசித்து வருவது. அப்படி ஒருமுறை சென்றபோது, வழியில் இருந்த சுனை ஒன்றில் நீராடிவிட்டு எழுந்தவர், 'ஓம் நமசிவாய! என்றபடியே வர, அவருடன் சென்றவர்கள் எல்லோரும் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். காரணம், அதுநாள் வரை ’அம்மா, பகவதி, தாயே, தேவி’ என்றெல்லாம் அம்மனின் திருப்பெயர்களை மட்டுமே சொல்லி வந்த அவர், முதன் முறையாக சிவனின் திருமந்திரத்தினை உச்சரித்ததுதான். அதுமட்டுமன்றி அவரது பேச்சு, நடவடிக்கை, உணவு முறை என எல்லாவற்றிலும் அப்போதிலிருந்து மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிவசித்தர் என்று அழைக்கத் தொடங்கினார்கள் பக்தர்கள்.
அதன் பின்னர், சிவன் அருளாலும் அம்பிகை அருளாலும் மூகாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் கோயில் பொன்னமராவதியில் எழுந்தது. அங்கே பகவதி, ரேணுகா தேவியும் குடிகொண்டனர். இதோ இன்னும் அங்கே அம்பிகையரின் அருட்கடாட்சம் நிறைந்திருப்பதால், பக்தர் கூட்டம் தேடித்தேடி வருகிறது. குறிப்பாக அமாவாசை தினங்களில் இங்கே நடக்கும் விசேஷ ஆராதனைகளில் ஏராளமானோர் பங்கேற்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் அறிந்தோ, அறியாமலோ பிறருக்கு நீங்கு இழைத்திருக்கலாம். இந்தக் கோயிலுக்கு வந்து வணங்கினால், அத்தகைய பாவங்கள் நீங்கும். அவர்களின் மனமும் நல்வழிப்படும் என்கிறார்கள், பக்தர்கள்.
எங்கே இருக்கு?
இந்த கோயில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அமைந்துள்ளது. தரிசன நேரம்: காலை- 8 முதல் 11:30, மாலை: 5-7 வரை. அமாவாசை அன்று முழுநேரம் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
(கட்டுரை: விஜி ஆர் கிருஷ்ணன் / பக்தி / 19.06.2025)
What's Your Reaction?






