திருமாவை முதலமைச்சராக்க வேண்டும் என்று சொன்னது யார்? ரகசியம் உடைத்த சி.வி.சண்முகம்..!
அதிமுகவின் தேர்தல் செயல்பாடுகள் தொடர்பாக அக்கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ள நிலையில், திமுக – அதிமுக பேச்சுவார்த்தைக் குறித்தும், திருமாவளவனை முதலமைச்சராக பரிந்துரை செய்தது யார் என்ற ரகசியங்களை போட்டுடைத்துள்ளார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த சி.வி.சண்முகம், தேர்தல் முடிவுகள், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் சமீபத்திய கருத்துகள் குறித்து விளக்கம் அளித்தார்.
திமுக கூட்டணிக்கு எங்கள் தரப்பில்தான் முதலில் அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என சி.வி.சண்முகம் தெரிவித்தார். இதற்கு ஆதாரமாக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
மேலும், மே 4-ம் தேதிக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமிக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே அரசியல் ரீதியாக நெருக்கமான உறவு உருவாகிவிட்டதாகவும், இருவரையும் ‘பங்காளிகள்’ என்று பேசும் அளவுக்கு சூழல் மாறியுள்ளதாகவும் சி.வி.சண்முகம் விமர்சித்தார்.
திருமாவளவனை முதலமைச்சராக முன்னிறுத்துவது தொடர்பாக தான் முன்பு பேசியது உண்மைதான் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் நடைபெற்றபோது, திமுக ஆதரவுடன் ஆட்சி அமைப்பது குறித்து பேசப்பட்டதாகவும், அதற்கு சில கட்சிகள் உடன்படாத சூழலில் மாற்றுத் திட்டமாக திருமாவளவனை முதலமைச்சராக முன்னிறுத்தலாம் என ஆலோசனை கூறப்பட்டதாகவும் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
அந்த சூழ்நிலையில், திமுக ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகும் திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடிந்தால், திருமாவளவனை முதலமைச்சராக ஏற்றுக்கொள்வதில் மட்டும் என்ன பிரச்சினை என தான் கேள்வி எழுப்பியதாக அவர் விளக்கினார்.
அதேபோல், திருமாவளவனை முதலமைச்சராக ஏற்க முடியாது என்ற நிலைப்பாடு இருந்தால், திமுகவுக்கு எதிராக உருவான அதிமுகவும் திமுகவை எதிர்த்து செயல்படும் தவெகவும் இணைந்து செயல்படுவதில் என்ன தவறு என்றும் தான் அப்போது கேள்வி எழுப்பியதாக சி.வி.சண்முகம் கூறினார்.
“அதிமுக என்பது திமுகவை எதிர்த்து உருவான இயக்கம். திமுகவை எதிர்த்து ஆட்சியை பிடித்த இயக்கம். அப்படியிருக்க, திமுகவை எதிர்க்கும் தவெகவை ஆதரிப்பதில் என்ன தவறு?” என்ற அடிப்படையிலேயே தாம் கருத்து தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.
ஆனால், தற்போது நடைபெற்ற சம்பவங்களை மறைத்துவிட்டு திமுக கூட்டணி குறித்து வேறு விதமாக தகவல் கூறப்படுவதாக சி.வி.சண்முகம் குற்றம்சாட்டினார். “திரும்பத் திரும்ப ஒரு பொய்யை சொன்னால் அது உண்மையாகிவிடாது” என்ற தொனியில் அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
திமுகவுடனான கூட்டணி விவகாரம், திருமாவளவன் தொடர்பான ஆலோசனை மற்றும் தவெகவை ஆதரிப்பது குறித்த தனது முந்தைய கருத்துகள் குறித்து சி.வி.சண்முகம் அளித்துள்ள இந்த விளக்கம், அதிமுகவின் உள்கட்சி அரசியலில் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?