அரசியலிருந்து விலகிய ராமதாஸ்.... புதிய பாய்ச்சலுக்கு தயாராகும் பாமக...!
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அரசியல் துறவறம் மேற்கொள்வதா அதிரடி முடிவை அறிவித்துள்ளார். இனி அரசியல் குறித்து பேசவோ, தலையிடவோ மாட்டேன் என்றும், கட்சியின் முழு அரசியல் பொறுப்பையும் அன்புமணி ராமதாஸ் கவனிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று (ஜூலை 25 ஆம் தேதி ) தனது 88வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி, திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில், தந்தையை நேரில் சந்தித்து ஆசி பெற்ற அன்புமணி ராமதாஸ், அவருடன் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார். அப்போது பேசிய ராமதாஸ், தனது அரசியல் வாழ்க்கை குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அவர் பேசுகையில், "எனது 88வது வயதில் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன். இன்று முதல் அரசியல் குறித்து பேச மாட்டேன். அரசியல் விவகாரங்களில் தலையிடவும் மாட்டேன். இனி கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் அனைத்தையும் அன்புமணி ராமதாஸ் பார்த்துக் கொள்வார்" என்று தெரிவித்தார்.
மேலும், "என்னை சந்திக்க வருபவர்களை வழக்கம்போல சந்திப்பேன். அவர்கள் என்னிடம் நலம் விசாரிக்கலாம்; நானும் அவர்களிடம் நலம் விசாரிப்பேன். ஆனால் அரசியல் குறித்து என்னிடம் பேச வேண்டாம். இனி அந்த விஷயத்தில் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்" என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
ராமதாஸின் இந்த அறிவிப்பு பாமக வட்டாரத்தில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. சமீப காலமாக பாமகவில் ஏற்பட்டிருந்த தந்தை-மகன் கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது கட்சியின் முழு அரசியல் பொறுப்பையும் அன்புமணி ராமதாஸ் ஏற்கிறார் என்பதை ராமதாஸ் வெளிப்படையாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது. இந்த அறிவிப்பு, பாமகவின் அடுத்தகட்ட அரசியல் பயணத்தில் முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.
What's Your Reaction?