நிபா வைரஸ் பரவல்..  தமிழக - கேரளா எல்லை பகுதிகளில் தீவிர சோதனை...

நிபா வைரஸ் பரவலால் கோவை - கேரளா, செங்கேட்டை - புளியரை, கூடலூர் - கேரளா, தேனி - கேரளா ஆகிய எல்லைகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Sep 20, 2024 - 13:55
நிபா வைரஸ் பரவல்..  தமிழக - கேரளா எல்லை பகுதிகளில்  தீவிர சோதனை...

நிபா வைரஸ் பரவலால் கோவை - கேரளா, செங்கேட்டை - புளியரை, கூடலூர் - கேரளா, தேனி - கேரளா ஆகிய எல்லைகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கேரளாவில், நிபா வைரஸ் காரணமாக இளைஞர் உயிரிழந்ததையடுத்து  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் - கேரளா எல்லைகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்து இருந்தது.

அதன்படி கோவை - கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள வாளையார், வேலந்தாவளம், முள்ளி, மீனாட்சிபுரம், மேல்பாவி,  கோபாலபுரம், வீரப்ப கவுண்டனூர், நடுப்புனி, ஜமீன்காலியாபுரம், வடக்காடு, செம்மனாம்பதி உள்ளிட்ட 13 சோதனை சாவடிகளில் மருத்துவ சுகாதார துறையினர் சிறப்பு தற்காலிக முகாம்களை அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்களில் வருவோரிடம் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா ? என கேட்டு பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும், செங்கேட்டை - புளியரை மற்றும் கூடலூர் - கேரளா மற்றும் தேனி - கேரளா எல்லை பகுதிகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதை அடுத்து  கோவை மாவட்டத்தில் உள்ள 13 சோதனை சாவடிகளிலும் சுகாதாரக் குழுவினர் நியமிக்கப்பட்ட 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டுமென உத்தரவு பிறப்பித்து உள்ளதாகவும்,  மேலும் அனைத்து அரசு மற்றும்  தனியார்  மருத்துவமனைகளிலும் நிபா வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சைக்கு வரும் நபர்களின் விவரங்களை உடனே அறிவிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து கடந்த சில நாட்களாக மருத்துவ குழுவினர் தீவிர மருத்துவ பரிசோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow