ரவுடிகளுக்கு வார்னிங் - சென்னை காவல் ஆணையர் விளக்கம் அளிக்க உத்தரவு

சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் வரும் 14ம் தேதி நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவு

Oct 7, 2024 - 19:46
ரவுடிகளுக்கு வார்னிங் - சென்னை காவல் ஆணையர் விளக்கம் அளிக்க  உத்தரவு

ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என்பதின் அர்த்தம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், கொலைக்கு காரணமான ரவுடி நாகேந்திரன், அஞ்சலை, அஸ்வத்தாமன் உள்ளிட்ட 28 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் கைதான 25 நபர்கள் மீது குண்டாஸில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலையை தொடர்ந்து சென்னை முழுவதும் ரவுகளை பிடிக்கும் பணியிலும், எச்சரிக்கும் பணியிலும் போலீசார் தீவிரம் காட்டினர். மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய திருவேங்கடம் என்பவர் வழக்கு விசாரணையின் போது துப்பாக்கியை கொண்டு போலீசாரை தாக்க முயன்றதால் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து காக்கா தோப்பு பாலாஜி மற்றும் சீசிங் ராஜா என சென்னையில் அடுத்தடுத்து ரவுகளின் மீதான என்கவுன்டர் தொடர்ந்து வருகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலையை தொடர்ந்து சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராஜ் ரத்தோர் மாற்றப்பட்டு புதிய ஆணையராக அருண் பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அருண், ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என தெரிவித்தார். மேலும் சென்னை ரவுடியிசம் முழுமையாக தடுக்கப்படும் என்றார்.இந்த நிலையில், ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என்பதின் அர்த்தம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருவொற்றியூர் சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸ் உதவி கமிஷனர் இளங்கோவன், தலைமையில் போலீசார்,அங்கு வசிக்கும் சரித்திர பதிவேடு ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று, அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து , ஒழுக்கமாக இருக்க வேண்டும் இல்லை என்றால் என்கவுன்டர் செய்ய வாய்ப்புள்ளது என்று கூறிய காட்சிகள் யூடியூப் ஒன்றில் வெளியானது.இந்த காட்சிகளின் அடிப்படையில், தானாக முன்வந்து வழக்காக எடுத்து, மனித உரிமைகள் ஆணைய தலைவர் நீதிபதி மணிக்குமார், உறுப்பினர் கண்ணதாசன்அமர்வு விசாரணை நடத்தியது.

அப்போது ஆஜரான உதவி ஆணையர் இளங்கோவன், சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் எச்சரிக்கை செய்ததாக குறிப்பிட்டார்.அப்போது குறுக்கிட்ட ஆணையத்தின்  தலைவர் நீதிபதி மணிக்குமார், ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என்பதின் அர்த்தம் என்ன என கேள்வி எழுப்பினார்.அதற்கு தெரியாது என உதவி ஆணையர் பதில் அளித்ததால், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் வரும் 14ம் தேதி நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow