ஆட்டத்தை தொடங்கிய தவெக… முதல் ஆளாக ஆஜரான எ.வ.வேலு..!
சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜரானார்.
தவெக அரசு அமைந்த்தில் இருந்து திமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை குதிரை பேர வழக்கில் தவெக சிக்க வைக்க நினைத்த நிலையில், போராடி முன் ஜாமீன் வாங்கினார் என்றும், அடுத்தது எ.வ.வேலு மற்றும் கே.என்.நேருவே தவெகவின் டார்கெட்டாக இருப்பதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், எ.வ.வேலு அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் விசாரணை அதிகாரி டி.எஸ்.பி. பாஸ்கரன் தலைமையிலான அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி வருகிறது.
அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராம் வெங்கடேசன் கடந்த 2022-ஆம் ஆண்டு அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், கடந்த மாதம் 25-ஆம் தேதி எ.வ.வேலுவுடன் தொடர்புடைய 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் ரூ.40 லட்சம் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்திருந்தது. எனினும், அந்த குற்றச்சாட்டை எ.வ.வேலு மறுத்திருந்தார்.
இந்த வழக்கில் விளக்கம் பெற ஜூலை 3-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு முதலில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருப்பதாக தெரிவித்து அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதுடன், ஜூலை 15-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.
அந்த சம்மனுக்கு இணங்க இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் எ.வ.வேலு ஆஜராகியுள்ள நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு வழக்கு தொடர்பாக 1 மணி நேரத்திற்கு மேலாக முன்னாள் அமைச்சர் எவ வேலுவிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், 100க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்டு அதை எழுத்துப்பூர்வமாக எவ வேலுவிடம் கேட்டு பெறப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ வேலு அளிக்கும் பதில்களை வீடியோ பதிவு மூலமாகவும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் செய்வதாகவும், விதிமுறைகளின் படி ஒப்பந்தங்கள் கோரப்பட்டதா? அரசு நடைமுறைகளை முறையாக பின்பற்றப்பட்டதா? என விசாரணை மேற்கொள்ளப்பட்டுவதாக கூறப்படுகிறது.
மேலும், 3.23 கோடி வரை ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்கப்பட்டது? எதன் அடிப்படையில் கொடுக்கப்பட்டது? சாலைகள் அமைக்காமலேயே பணம் ஒதுக்கப்பட்ட நிலையில், இதனை நேரடியாக சென்று ஆய்வு செய்தது யார்? போலி ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அதனை ஏன் சரிபார்க்கவில்லை போன்ற பல்வேறு கேள்விகள் அவரிடம் கேட்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?



