செத்துப்போன கருணாநிதிக்கு எதுக்கு நினைவிடம்? - ஆர்.எஸ்.பாரதிக்கு ஜெயகுமார் பதிலடி

ஜெயலலிதா குறித்து ஆர்.எஸ்.பாரதி கூறிய கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். 

Sep 24, 2024 - 15:57
செத்துப்போன கருணாநிதிக்கு எதுக்கு நினைவிடம்? - ஆர்.எஸ்.பாரதிக்கு ஜெயகுமார் பதிலடி

சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற திமுக வட சென்னை மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்றார். அப்போது மேடையில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, ”அம்மாவே (ஜெயலலிதா) போய் சேந்துருச்சு, அப்புறம் என்ன அம்மா உணவகம்..?” என்று தொண்டர்களிடையே பேசி இருந்தார். அதோடு, ”ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது ஒன்றரை கோடி ரூபாய்க்கு  இட்லி தோசை  சாப்பிட்ட எடப்பாடி கும்பல், ஏதோ  150 பேர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற அம்மா உணவகத்தையெல்லாம் திமுக மூடிவிட்டது என்பது போல் பேசி வருகின்றனர்” ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். 

இந்த நிலையில், ஆர்.எஸ்.பாரதியின் கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். 

பா. சிவந்தி ஆதித்தனாரின் 89 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் சிவந்தி ஆதித்தனார் திருவுருவ படத்துக்கு  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “மு.க.ஸ்டாலின் அவரது அப்பாவுடைய புகழைப்பாடுவது, கருணாநிதி சிலையை நிறுவுவது போன்ற என வேலையைத் தான்  மூன்று வருடங்களாக  பார்த்து வருகிறார்” என்றார். 
மேலும், அம்மாவே போய் சேர்ந்துட்டாங்க அப்போது எதற்கு அம்மா உணவகம் என பேசியதற்கு செத்துப்போன கருணாநிதிக்கு எதுக்கு என்பது கோடி ரூபாய் செலவில் நினைவிடம் என்றார் ஜெயகுமார்.

தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “கலைஞர் அந்த காலத்தில் சொன்னார் திமுக சங்கர மடம் இல்லை  வாரிசு அரசியல் செய்வதற்கு என்று.. ஆனால் அவர் ஸ்டாலினை சிறுக சிறுக கொண்டு வந்தார். வாரிசு அரசியலை மக்கள் ஏற்றுக் கொள்ள போவதில்லை. ஆனால் இந்த மூன்று ஆண்டுகளாக  உதயநிதி துணை முதல்வர் என்று மக்கள் மத்தியில் கருத்தை மு.க.ஸ்டாலின் பரப்பும் வேலையை பார்த்து வருகிறார். 

திமுகவில் பலர் மூத்தவர்கள் இருக்கிறார்கள் கட்சிக்காக உழைத்து  மாடாக  தேய்ந்திருக்கிறார்கள். உதயநிதிக்கு துணை முதலமைச்சர் ஆவதற்கு என்ன தகுதி இருக்கிறது? திமுகவில் வேறு யாருக்கும் தகுதி இல்லையா? 

உதயநிதியை துணை முதல்வராக கொண்டுவருவதன் வெளிப்பாடாக தான் மாற்றம் உண்டு ஏமாற்றம் இல்லை என முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார். உதயநிதி முதல்வராக கொண்டு வருவதற்கான முயற்சி நடைபெறுகிறது. இந்த ஆட்சியில் மகனுக்கு முடி சூட்டும் வேலைதான் நடைபெற்று வருகிறது, நரி வலது போனால் என்ன இடது போனால் என்ன? நாட்டிற்கு ஒன்றும் நடக்காது” என்று விமர்சித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow