கண்பார்வையை கூர்மையாக்கும் கருடன் சம்பா... செலவுக்கு மேல் ஒரு மடங்கு லாபம் நிச்சயம் உண்டு.
தமிழகத்தின் பாரம்பரிய நெல் வகைகளில் முதன்மையானது கருடன் சம்பா. இந்த நெல் கண்பார்வையைத் தெளிவாகவும், கூர்மையாகவும் மாற்றும் அளவுக்கு மருத்துவச் சக்திகொண்டது என்கிறார்கள் இயற்கை முறை விவசாயிகள். கழுகுப் பார்வையைப் போல மனிதரின் பார்வையையும் மாற்றும் மகத்துவமான நெல் என்பதாலேயே கருடன் சம்பா என்றழைக்கப்பட்டு வரும் இந்த வகை நெல்லுக்கு புவிசார் குறியீடு பெறுவதில் தனித்த ஆர்வம் காட்டி வருகிறார்கள் இயற்கை முறை விவசாயிகள்.
கடலூர் மாவட்டத்தில் மரபு வழி தீராத ஆர்வம் கொண்டவரும் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வழியில் செயல்பட்டு வருபவருமான விவசாயி முருகனை அவரது சொந்த ஊரான முருகன்குடியில் சந்தித்தோம். கருடன் சம்பா நடவு செய்திருந்த வயலில் களை எடுத்துக்கொண்டிருந்த மாவட்டத்தில் வேளாண்மையில் அவர் உற்சாகமாக வரவேற்று, கருடன் சம்பா நெல் மகிமை குறித்து கூறினார்.
பாரம்பரிய நெல் வகைகளில் தனிக்கவனம்
"என் தாத்தா வாழ்ந்த காலத்தில் இயற்கை வேளாண்மைதான். பசுமைப்புரட்சி வந்த பிறகு அப்பா காலத்தில்தான் ரசாயன வேளாண்மை தொடங்கியது. இந்த வேளாண்மையின் பின்விளைவுகளை உணர்ந்த நான், மரபு வேளாண்மைக்குத் திரும்புவது என்று முடிவெடுத்தேன். 2003-ம் ஆண்டு திருச்சி கல்லணையிலிருந்து நெய்வேலி வரை 10 நாள் நடைப்பயணம் மேற்கொண்டோம். அதன் முதல் நாளில் பயணத்தைத் துவக்கி வைத்தவர் இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார். அந்நிகழ்வில்தான் அவரது அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அதிலிருந்து தொடர்ந்து அவரோடு வாய்ப்பு கிடைக்கும் போது பயணித்து வந்தேன்.
பிறகு 2006-ம் ஆண்டு திருத்துறைப்பூண்டி ஆதிரங்கத்தில் நடந்த பாரம்பரிய நெல் திருவிழாவில் கலந்து கொண்டபோதுஅங்கு கிடைத்த இரண்டு கிலோ பாரம்பரிய நெல்லைக் கொண்டு வந்து நடவு செய்தேன். முதன் முதலில் பயிர் செய்த மாப்பிள்ளை சம்பா, கிச்சிலி சம்பா ஆகிய இரண்டு ரகங்களும் நல்ல மகசூலைத் தந்தன. அந்தக் காலகட்டத்தில் இயற்கை வேளாண்மை செய்பவருக்கு அரசின் உதவிகள் கிடைக்கவில்லை. எனவே, விளைவித்த நெல்லை சந்தைப்படுத்தவும், விதைகளைப் பரவலாக்கவும் ஓர் இயக்கம் வேண்டும் என்பதை உணர்ந்து 'செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவம்' என்கிற அமைப்பை நிறுவினோம்.
மாணவர்கள், உழவர்களுக்கு பயிற்சி
இந்த அமைப்பின் வழியாக ஒவ்வொரு வருடமும் விதைத் திருவிழா, அறுவடைத் திருவிழா, நம்மாழ்வார் நினைவேந்தல் பேரணி பொதுக்கூட்டம், வயல்வெளி பயிற்சி, வேளாண் கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சி, உழவர்களுக்கான பயிற்சி என தொடர்ந்து வேலைகளைச் செய்து வருகிறோம். இந்த நிலையில் மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுணி, சீரகச்சம்பா ஆகிய மரபு நெல் ரகங்களை வேளாண்மை பல்கலைக்கழகம் வீரிய ஒட்டு செய்து கடந்த 2018-ம்ஆண்டு வெளியிட்டுவிட்டார்கள்.
மரபு நெல் ரகங்களை அழிவிலிருந்து பாதுகாக்க எங்கள் குழுவில் ஒவ்வோர் உறுப்பினரும் ஒவ்வொரு மரபு நெல் ரகங்களைப் பாதுகாத்து வர வேண்டும் என முடிவெடுத்து, 2023 டிசம்பர் 31-ம் தேதி பெண்ணாடத்தில் நடைபெற்ற நம்மாழ்வார் நினைவேந்தல் கூட்டத்தில் தீர்மானித்தோம்.
அதன் அடிப்படையில் கருடன் சம்பா விதை நெல் காப்பாளர்' என்ற உறுதியை எடுத்துக்கொண்டு அதற்கான சான்றிதழைப் பெற்றுக்கொண்டேன். இன்று வரை கருடன் சம்பா விதை நெல்லைப் பாதுகாத்து வருகிறேன். அதன் நடவு செய்யும் முறையை தெளிவாக எடுத்துக் கூற விரும்புகிறேன்.
கருடனுக்கு இணையான ஆற்றல்
கருடன் சம்பா நெல் என்பது கருடன் பறவைக்கு கழுத்தில் வெள்ளை இருப்பதுபோல் இந்த நெல்லுக்கும் கருத்துப் பகுதியில் வெள்ளையாக இருக்கும். அதனால்தான் இது கருடன் சம்பா என்று பெயர் பெற்றது. கருடன் பறவை எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் கீழே உள்ள பொருள்களைக் கூர்மையாக பார்க்கும் திறன் கொண்டது. அதேபோல 40 வருடம் வாழக்கூடிய இந்தப் பறவை கருங்கல் பாறையின் மீது தன்னுடைய அலகை உடைத்து எறிந்து விட்டு புதிய அலகு வளர்ந்தவுடன் மறுபடியும் 40 வருடங்கள் வாழ்ந்து, வாழ்நாளை இரட்டிப்பாக்கும் திறன் கொண்டது. ஆகவே கருடன் சம்பா நெல்லுக்கும் இந்தப் பறவையின் குணம்போல இரட்டிப்பாக்கும் சக்தியுள்ளது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.
கருடன் சம்பா நெல் ரகம் 5 அடி உயரம் வளர்ந்து, 150 நாள்களில் விளையும் வெள்ளை அரிசி ரகம் ஆகும். ஒரு ஏக்கர் நிலத்தில் 12 டன் தொழுவுரம் போட்டு முதல் உழவு ஓட்டி 12 கிலோ தக்கை பூண்டு, சணப்பை விதைத்து விட வேண்டும். நஞ்சில்லா இயற்கை உரத்தினை மட்டுமே வயலில் போட்டு திடப்படுத்த வேண்டும். அடுத்து 30 நாட்கள் கழித்து ஐந்து சென்ட் நாற்றங்காலில் சேரடித்து, சமப்படுத்தி, 3 அடி அகலம் 20 அடி நீளம் உள்ள மேட்டுப்பாத்தியில் பாய் அமைத்து ஐந்து கிலோ நெல் விதைத்து மூடாக்கு போட்டு விட வேண்டும். மூன்று நாள் கழித்து மூடாக்கை எடுத்து விட வேண்டும்.
பிறகு 15 நாள் கழித்து நாற்று பறித்து ஒரு ஏக்கரில் வரிசைக்கு வரிசை ஓரடியும், பயிருக்குப் பயிர் ஓரடியும் இடைவெளி இருக்குமாறு கிழக்கு மேற்கில் நடவு செய்ய வேண்டும். 15 நாள் இடைவெளிக்குப் பிறகு நிலத்துக்கு அடி உரமாக மூன்று முறை, 15 நாள் இடைவெளியில் 600 லிட்டர் அமுத கரைசல் நீர் வழியாக நிலத்திற்குப் பாய்ச்ச வேண்டும். பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த, நடவு செய்த 25 நாட்களுக்குப் பிறகு 20 லிட்டர் பூச்சி விரட்டி கரைசலை ஒரு வார இடைவெளியில் இரண்டு முறை பயிரின் மேல் தெளிக்க வேண்டும்.
செலவு - வரவு - நிகர லாபம்
பயிர் செழித்து வளர்வதற்கு நடவு செய்த 30 நாட்களுக்குப் பிறகு 15 நாள் இடைவெளியில் இரு முறை 6 லிட்டர் பஞ்சகவ்யக் கரைசலை பயிரின் மேல்தெளிக்க வேண்டும். பூக்கும் தருவாயில் அதாவது தண்டுப் பகுதியில் சூல் இருக்கும்போது 10 லிட்டர் தேமோர் கரைசலைப் பயிரின் மேல் ஒரு முறை தெளித்தால் போதும். பூக்கள் உதிராமல் மகரந்தச் சேர்க்கை நடந்து தரமான நெல் கிடைக்கும். அதன் பிறகு அறுவடைதான்.
மரபு நெல் ரகம் என்பதால் ஒரு ஏக்கரில் விளைச்சல் குறைவாகவே இருக்கும். கருடன் சம்பா நெல்லைப் பொருத்தவரை ஒரு ஏக்கருக்கு 75 கிலோ எடை கொண்ட மூட்டை 15 மூட்டைகள் கிடைக்கும். நாங்கள் இந்த நெல்லை விதை நெல்லாகவும், மதிப்பு கூட்டி அரிசியாகவும் கொடுக்கிறோம்.
செலவு
மூன்று முறை உழவு
খ. 4,500
12 டன் தொழு உரம் :
খ. 9,000
தக்கை பூண்டு சனப்பை :
খ. 1,200
விதை நெல் :
5. 500
நாற்றங்கால் தயார் செய்ய
5 1,000
நடவு கூலி :
খ. 3,500
இருமுறை களை எடுக்க :
5 4,000
இயற்கை இடுபொருள்
அமுத கரைசல் மூன்று முறை :
খে 1,000
பூச்சி விரட்டி தெளிக்க இருமுறை :
খ. 600
பஞ்சகவ்யா தெளிக்க இருமுறை :
খ. 1,500
தேமோர் கரைசல் ஒருமுறை :
. 500
அறுவடை செலவு :
খ. 3,000
மொத்த செலவு :
5. 30,800
மொத்த வரவு :
ஒரு கிலோ அரிசி ரூபாய் 80 வீதம் 750 கிலோவுக்கு 60,000 கிடைக்கும். இதில் 29,200 ரூபாய் அளவுக்கு நிகர லாபத்தைப் பெறலாம். ஆக, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உழைத்தால் கூடுதலாக லாபம் கிடைக்கும்.
மருத்துவக் குணம்:
கருடன் சம்பா அரிசியைச் சாப்பிட்டு வந்தால் கண் பார்வையைக் கூர்மையாக்கும். அதோடு கண்கள் பலமாகும் கண் அயர்ச்சி தூக்கமின்மை போன்ற குறைபாடுகளைப் போக்கும். மேலும் இதன்மூலம் மனிதனின் ஆயுளை நீட்டிக்கும் வல்லமை கொண்டவை. மனித தசைகளுக்கான சத்துக்களும், நரம்பு மண்டலத்திற்கு உண்டான சத்துக்களும் இதன் மூலம் கிடைக்கும். அனைத்து வகையான எலும்புகளை வலுவாக்கும் ஆற்றல் பெற்றவை. எத்தனை வயதானாலும் பார்வைக்கு முக்கிய மருந்தாக இந்த கருடன் சம்பா அரிசி பயன்படுத்தி வந்தால் அனைத்து வகை சத்துக்களும் இதிலிருந்து கிடைக்கும்.
புவிசார் குறியீடுக்கு பரிந்துரை
நிறைவாக, கருடன் சம்பா மரபு நெல் எங்கள் பகுதியில் என் முன்னோர்கள் பாதுகாத்து தொடர்ந்து பராமரித்து வந்துள்ளனர். இந்த மண்ணுக்கும் சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக நிலைத்து விட்டது. ஆகையால் இந்தக் கருடன் சம்பா விதை நெல்லை நாங்கள் பாதுகாத்து வருகிறோம். தமிழ் நாட்டிலேயே எங்கள் பகுதியில்தான் இந்த நெல்லைப் பயிரிட்டு வருகிறோம். தற்போது தமிழகம் முழுவதும் இந்த நெல்லை பயன்பாட்டுக்குக் கொண்டு செல்லுவதற்கு தமிழக அரசு உதவிட வேண்டும். அதைபோல, எங்கள் பகுதியில் தனித்த ஆர்வத்துடன் பயிரிடப்பட்டு வரும் கருடன் சம்பாவுக்குப் புவிசார் குறியீடு வழங்கவும் புதிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று விரிவாக கூறினார் இயற்கை விவசாயி முருகன்.
கருடன் சம்பாவுக்கு புவிசார் குறியீடு கிடைத்தால் இயற்கை விவசாயிகள் உற்சாகமடைவார்கள்-
What's Your Reaction?

