வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி?
வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கதேசப் பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் நடுத்தர அடுக்கில் சுழற்சி நிலவி வருவதால், அடுத்த 24 மணி நேரத்திற்குள் வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
இந்த வானிலை அமைப்பு தற்போது பலவீனமாக உள்ள தென்மேற்கு பருவமழையை மீண்டும் வலுப்படுத்தக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் தாக்கத்தால் அடுத்த ஏழு நாட்களுக்கு இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பரவலாக மழை தீவிரமடையும் என்றும் IMD கணித்துள்ளது.
குறிப்பாக ஜூலை 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஒடிசாவின் பல மாவட்டங்களில் மிகக் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
மேலும், மேற்கு வங்காளத்தின் சமவெளிப் பகுதிகளில் தாழ்வான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், டார்ஜிலிங், காலிம்பொங் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் சாத்தியம் உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் வானிலை அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து, அதிகாரிகள் வழங்கும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
What's Your Reaction?



