சைவமா? வைணவமா? அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சு- கட்சியின் பொறுப்பிலிருந்து அதிரடி நீக்கம்!
தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் பேசிய காணொளி ஒன்று சர்ச்சையாகிய நிலையில், கட்சியின் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடையும் தருவாயில், பல அமைச்சர்களின் செயல்பாடுகள் பொது வெளிகளில் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகின்றனர். அமைச்சர் பொன்முடி சைவமா? வைணவமா? என அநாகரீகமாக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகிய நிலையில், கட்சியில் பொன்முடி வகித்த பதவியினை பறித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி திமுகவின் கழக துணைப் பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்த நிலையில், பொன்முடி அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக திமுகவின் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அமைச்சர் பொன்முடியின் பேச்சு கண்டனத்திற்கு உள்ளாகுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னர் மகளிருக்கான விடியல் பயணம் குறித்து பேசுகையில், ”ஓசி பஸ்” என பெண்களை நோக்கி பேசினார். மற்றொரு விழா நிகழ்வில் ஒன்றிய குழு தலைவரை சாதி பெயர் குறிப்பிட்டு பேசியும் சர்ச்சையில் சிக்கினார்.
திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி அமைச்சரின் பொன்முடி பேச்சுக்கு தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார். ”அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது” என தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது. — Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) April 11, 2025
சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைப்பெற்ற தி.மு.கவின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “என்னைத் துன்புறுத்துவது போல் மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் செயல்படக்கூடாது. நாள்தோறும் நமது கட்சியினர் யாரும் புது பிரச்னையை உருவாக்கிடக்கூடாது என்கிற எண்ணத்தோடு தான் கண் விழிக்கிறேன். சில நேரம் தூங்க விடாமலும் செய்துவிடுகின்றனர்” என வெளிப்படையாக பேசினார் முதல்வர்.
What's Your Reaction?






