மக்களவை தேர்தலை புறக்கணிக்கும் மீனவர்கள்… என்ன காரணம்?...

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Mar 23, 2024 - 12:10
மக்களவை தேர்தலை புறக்கணிக்கும் மீனவர்கள்… என்ன காரணம்?...

மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள், தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
 
கடந்த இரண்டு வாரங்களில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 76 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், நேற்று முன்தினம் (மார்ச் 21) நெடுந்தீவு மற்றும் மன்னார் கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம், புதுக்கோட்டையை சேர்ந்த 32 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில் இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், 10,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் உள்ளனர். மீனவர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி வரை அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தொடர்ந்து மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் ஏப்ரல் 8-ம் தேதி வட்டாட்சியரிடம் வாக்காளர் மற்றும் ஆதார் அட்டைகளை ஒப்படைப்பதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர். மேலும், மக்களவை தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow