METTUR DAM : டெல்டா விவசாயிகளுக்கு குட் நியூஸ்! மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராய் முதல் முறையாக மேட்டூர் அணையை திறந்து வைத்தார் விஜய்.
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் விஜய் இன்று (செப்டம்பர் 1) தண்ணீரைத் திறந்து வைத்தார். இதற்காகச் சேலம் வருகை தந்த அவர், அணையின் மேல்பகுதியில் இருந்து காவிரி ஆற்றில் மலர்கள் மற்றும் நெல் தூவி வணங்கித் தண்ணீரைத் திறந்து வைத்தார்.
தாமதமான பாசன நீர் திறப்பு
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு தொடக்கத்தில் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் குறித்த தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் டெல்டா பகுதி விவசாயிகள் கவலையடைந்தனர்.
அதன்பின்னர், கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாகக் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து, நேற்று மாலை அணையின் நீர்மட்டம் 91.15 அடியை எட்டியது.
அணை திறப்பு
அணையின் நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து, சம்பா சாகுபடிக்குத் தேவையான தண்ணீரைத் திறக்கத் தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. அதன்படி, தனி விமானம் மூலம் சேலம் வந்தடைந்த முதலமைச்சர் விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக மேட்டூர் அணையைச் சென்றடைந்தார். நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்தும் அவருடன் இந்நிகழ்வில் பங்கேற்றார்.
இன்று முதற்கட்டமாக வலதுகரை கால்வாய் வழியாக வினாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீரின் அளவு படிப்படியாக வினாடிக்கு 7,000 கன அடி வரை உயர்த்தப்படும். மேட்டூர் அணையின் வரலாற்றில் 93-வது முறையாகப் பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் 45 நாட்களுக்குத் தொடர்ச்சியாகத் தண்ணீர் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, ஜூன் மாதம் திறக்கவேண்டிய மேட்டூர் அணை இந்த ஆண்டும் தாமதமாய் திறக்கப்பட்டுள்ளது.
இத்துடன் சேர்த்து மொத்தமாக 63 தடவை மேட்டூர் அணை தாமதமாக திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?