கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட்டுகள் விற்ற 12 பேர் கைது.. 56 டிக்கெட்டுகள் பறிமுதல்

சென்னை - லக்னோ அணிகளுக்கு இடையே நேற்று(23.04.24) நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்ற 12 பேரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 56 டிக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

Apr 24, 2024 - 13:02
கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட்டுகள் விற்ற 12 பேர் கைது.. 56 டிக்கெட்டுகள் பறிமுதல்

கிரிக்கெட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள், கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

ஐபிஎல்லில் அதிக ரசிகர்களை கொண்ட அணியாக சிஎஸ்கே இருந்து வருகிறது. இதற்கு காரணம் சிஎஸ்கேவில் இடம்பெற்றுள்ள மகேந்திர சிங் தோனிதான். இதனால், சிஎஸ்கே அணியின் ஆட்டங்கள் உன்னிப்பாக பார்க்கப்பட்டு வருகின்றன. 

மைதானத்தில் எப்போது தோனி களமிறங்குவார், அவரை காண வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர். சென்னையில் சிஎஸ்கே பங்கேற்கும் போட்டி என்றால், ரசிகர்கள் பலரும் முண்டியத்து டிக்கெட்டுகளை வாங்க குவிந்து வருகின்றனர். அப்படி டிக்கெட் கிடைக்காத சமயத்தில், அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் டிக்கெட் கிடைத்தாலும் ரசிகர்கள் போட்டிப் போட்டு வாங்கிச் செல்கின்றனர். 

அவ்வாறு கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து, போலீசார் அவ்வப்போது கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில், நேற்று(23.04.24) சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் கூடியிருந்த நிலையில், கள்ளச் சந்தையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்பவர்களை கண்காணிக்கும் பணியில் திருவல்லிக்கேணி போலீசார் ஈடுபட்டனர். 

அந்த வகையில், கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட்டுகள் விற்பனை செய்ததாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மொத்தம் 12 பேரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 56 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow