கூட்டணிக்கு தூண்டில் போடும் அதிமுக, தவெக நமக்கு எதிரி அல்ல திமுகதான் நமக்கு உண்மையான எதிரி: எடப்பாடி பழனிசாமி பேச்சு
தவெக நமக்கு எதிரி அல்ல திமுகதான் நமக்கு உண்மையான எதிரி என நிர்வாகிகள் மத்தியில் எடப்பாடி பேசியுள்ளார். இது எதிர்காலத்தில் அதிமுக, தவெக கூட்டணிக்கு எடப்பாடி தூண்டில் போடுகிறாரா என எம்ஜிஆர் மாளிகை வட்டாரத்தில் பேசப்படுகிறது.
தேர்தல் தோல்விக்கு பிறகு சுமார் 1மாதத்துக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதன்முறையாக சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு இன்று வருகை தந்தார். அங்கு, அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது, நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக தோல்வி குறித்தும், வாக்கு சதவீதம் மிகவும் குறைந்து வருவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
முக்கியமாக, சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் அடுத்தடுத்து தவெகவில் இணைவது ஏன்? என்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. நிர்வாகிகளும் கூட்டத்தில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். இதை கேட்டுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அதிமுக கட்சியை வலுப்படுத்த ஆரோக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கட்சி நிர்வாகிகள் ஆலோசனைகளை கேட்டு கட்சி தலைமை செயல்படும். வரும் நாட்களில் படிப்படியாக மற்ற மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படும்.
அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க கட்சி தலைமை உறுதிபூண்டுள்ளது. தற்போது அதிமுகவில் உள்ள நிர்வாகிகள் யாரும் மனம் தளர வேண்டாம், அதிமுகவுக்கு தேர்தல் தோல்வி என்பது புதிது அல்ல. தோல்வி வந்தபோதெல்லாம் பல்வேறு எதிர்ப்புகளை கட்சி சந்தித்து, அதில் வெற்றிபெற்றுள்ளது. அதுபோல, தற்போதுள்ள பிரச்னைகளும் சரிசெய்யப்பட்டு, அதிமுக கட்சி மீண்டும் பலமான கட்சியாக, தமிழகத்தில் ஆட்சி பிடிக்கும் சக்தியாக மாறும். அதற்கு அனைவரும் இணைந்து ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்
”சமூக வலைதளங்களை சரியாக கையாளாததே நமது தோல்விக்கு காரணம். சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு கடைசி 3 நாட்களில் தான் நாம் வெற்றியை எழந்துள்ளோம். எதன் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெல்ல வேண்டும். சமூக வலைதள செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும். இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் அரசின் தவறுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். தவெகவின் வெற்றி நிலையானது அல்ல. அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் நாம்தான் வெற்றி பெறுவோம். தவெக நமக்கு எதிரி அல்ல திமுகதான் நமக்கு உண்மையான எதிரி.” இவ்வாறு அவர் பேசினார்.
What's Your Reaction?

