கள்ளச்சாராய பலி 50 ஆக உயர்வு... மேலும் பலர் கவலைக்கிடம்... மீளாத் துயரில் கள்ளக்குறிச்சி!
கள்ளச்சாராயம் குடித்தவர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பதால் கருணாபுரம் மட்டுமின்றி கள்ளக்குறிச்சி நகர் முழுவதுமே சோகத்தில் மூழ்கியுள்ளது.அங்கு எங்கு பார்த்தாலும் மக்களின் மரண ஓலமே கேட்கிறது.
![கள்ளச்சாராய பலி 50 ஆக உயர்வு... மேலும் பலர் கவலைக்கிடம்... மீளாத் துயரில் கள்ளக்குறிச்சி!](https://kumudam.com/uploads/images/202406/image_870x_6674e52d65d48.jpg)
கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி நகர்ப்பகுதியைச் சேர்ந்த கருணாபுரம் பகுதியில் கோவிந்தராஜ் என்ற கண்ணுக்குட்டி என்பவர் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். அப்பகுதியை சேர்ந்த பலர் இந்த கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர்.
இதை குடித்த பலர் கடுமையான தலைவலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டனர். மேலும் சிலர் மயங்கி விழுந்தனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் அவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று இரவு வரை 45 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 5 பேர் இறந்துள்ளதால் உயிரிழப்பு 50 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் ஜிப்மர் மருத்துமனையில் சிகிச்சை பெறும் 16 பேரில் 6 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இது தவிர மற்ற மருத்துவமனைகளிலும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளச்சாராயம் குடித்தவர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பதால் கருணாபுரம் மட்டுமின்றி கள்ளக்குறிச்சி நகர் முழுவதுமே சோகத்தில் மூழ்கியுள்ளது.அங்கு எங்கு பார்த்தாலும் மக்களின் மரண ஓலமே கேட்கிறது.
அன்புரிக்குரியவர்களை இழந்து தவிக்கும் உறவினர்கள் கதறி அழுவதை பார்கும்போது கல்நெஞ்சும் கரைந்து விடும். இந்த விவகாரம் தொடர்பாக கோவிந்தராஜ், அவரது மனைவி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு உத்தரவின்பேரில் இந்த விவகாரத்தை கையில் எடுத்த சிபிசிஐடி பெண்கள் உள்பட 20க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலின், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என கூறியுள்ளார்.
அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்கள். இதேபோல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் அண்ணாமலை, தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த், நடிகரும், தவெக தலைவருமான விஜய் உள்பட பல்வேறு அரசியல் பிரமுகர்கள் சிகிச்சை பெறுபவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கும் ஆறுதல் கூறினார்கள்.
'இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்' என்று அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளதும், அரசின் நிர்வாக அலட்சியமே கள்ளச்சாராய உயிரிழப்புக்கு காரணம் என்று விஜய் குற்றம்சாட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
![like](https://kumudam.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudam.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudam.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudam.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudam.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudam.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudam.com/assets/img/reactions/wow.png)