ED புகார் - அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் 5 முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாததால், அமலாக்கத்துறையின் புகாரை ஏற்றுக் கொண்டு நேரில் ஆஜராகி விளக்கமளிக்க டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

Feb 7, 2024 - 17:01
Feb 7, 2024 - 17:05
ED புகார் - அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்

ஆத்ஆத்மி கட்சி தலைமையில் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக உள்ள டெல்லி, 32 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய, கடந்த 2021ம் ஆண்டு உரிமம் வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்து ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக பாஜக குற்றம்சாட்டியது. இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை, வருமான வரித்துறை இணைந்து விசாரணை மேற்கொண்டது. இதன் விளைவாக துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா, மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் உள்ளிட்ட ஆம்ஆத்மி தலைவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. தன்னை கைது செய்யும் நோக்கத்துடன் பாஜக அரசின் கைப்பாவையாக அமலாக்கத்துறை செயல்படுவதாகவும் சம்மன் சட்டவிரோதம் எனவும் கூறி அதனை அரவிந்த் கெஜ்ரிவால் நிராகரித்தார். 4 முறை சம்மனை நிராகரித்த அவர், 5ம் முறையாக பிப்ரவரி 2ம் தேதி ஆஜராக அனுப்பப்பட்ட சம்மனையும் புறக்கணித்தார். 

இதையடுத்து மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கின் சம்மனை தொடர்ந்து புறக்கணிப்பதாக கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ மனுத்தாக்கல் செய்தார். தொடர்ந்து இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக வரும் 17ம் தேதி நேரில் ஆஜராக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டு சம்மன் அனுப்பியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow