புத்தாண்டு கொண்டாட்டம் சென்னை கடற்கரையில் அனுமதி இல்லை : காவல்துறை கடும் கட்டுப்பாடு
2026ம் ஆண்டு புத்தாண்டு நள்ளிரவில் சென்னை கடற்கரைகளில் பொதுமக்களுக்கு காவல்துறை தடை விதித்துள்ளது.
சென்னையில் 19,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பு அளிக்க சென்னை காவல் துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் காவல் துறையினருக்கு உதவியாக, சுமார் 1,500 ஊர்க்காவல் படையினரும் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, 31.12.2025 மாலை முதல் 01.01.2026 வரை பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் காவல் ஆளிநர்கள், குதிரைப்படைகள் மற்றும் ATV (All Terrain Vehicle) எனப்படும் மணலில் செல்லக்கூடிய வாகனங்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், முக்கிய இடங்களில் Drone Camera க்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சில இடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதால் தகுந்த மாற்றுவழி ஏற்பாடுகளை பயன்படுத்திட வேண்டும்.
கடற்கரை ஓரங்களில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படும். அரசால் அனுமதிக்கப்பட்ட மனமகிழ் மன்றங்கள், ஓட்டல்கள், விடுதிகளுடன் கூடிய நட்சத்திர ஓட்டல்கள் ஆகிய இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும். மேலும் மது அருந்த அனுமதிக்கப்பட்ட இடங்களில் குழந்தைகள் அனுமதிக்கப்படக் கூடாது.
பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், ஒலி பெருக்கிகள் பயன்படுத்துவதற்கும் காவல்துறை மற்றும் இதர துறைகளில் அனுமதி பெற்ற பின்னரே நிகழ்ச்சி நடத்திட வேண்டும். மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது
What's Your Reaction?

