"வந்த ஏரியாவுக்கு மறுபடியும் வராதீங்க.." - தேர்தல் அலுவலர்களுக்கு கறார் உத்தரவு..!

Feb 26, 2024 - 17:03
"வந்த ஏரியாவுக்கு மறுபடியும் வராதீங்க.." - தேர்தல் அலுவலர்களுக்கு கறார் உத்தரவு..!

ஏற்கெனவே பணியாற்றிய தொகுதிக்குள் மீண்டும் வராதவாறு அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்களை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வலியுறுத்தியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் தேதி சில வாரங்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தேர்தல் ஆயத்தப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய மாநில அரசுகளை முன்னதாக தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. 

இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளில் ஒரு சிலர், வேறு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டாலும் அதே மக்களவைத் தொகுதியில் பணியாற்றும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. தொடர்ந்து ஏற்கெனவே பணியாற்றிய தொகுதிக்குள் மீண்டும் வராதவாறு அரசு அதிகாரிகள் பணியிட மாற்றங்களை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. 

இதன்படி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு, தலைமைச் செயலாளர், டிஜிபி, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி, 3 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஒரு மாவட்டத்திலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள், அதே நாடாளுமன்றத் தொகுதிக்குள் மற்றொரு மாவட்டத்தில் பணியமர்த்தப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow