Vairamuthu: “இசையும் கவிதையும் சேர்ந்தால் தான் பாடல்..” இளையராஜாவுக்கு செக் வைத்த வைரமுத்து!

தான் இசையமைத்த பாடல்களுக்கு இளையராஜா காப்புரிமை கோருவது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், இசையும் கவிதையும் சேர்ந்தால் தான் பாடல் என இளையராஜாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் வைரமுத்து.

Apr 29, 2024 - 13:47
Vairamuthu: “இசையும் கவிதையும் சேர்ந்தால் தான் பாடல்..” இளையராஜாவுக்கு செக் வைத்த வைரமுத்து!

சென்னை: இளையராஜா இசையமைத்த ”இது ஒரு பொன்மாலைப் பொழுது” பாடல் மூலம் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் வைரமுத்து. தமிழ்த் திரையிசையில் இளையராஜா – வைரமுத்து கூட்டணி செய்த மாயாஜாலங்கள் கொஞ்சநஞ்சமல்ல. வெற்றிகரமான கூட்டணியாக வலம் வந்த இருவரும் திடீரென பிரிந்தனர். அதன்பின்னர் இளையராஜா, வைரமுத்து கூட்டணி மீண்டும் இணையவே இல்லை. அதேநேரம் இருவருக்கும் இடையேயான வார்த்தை மோதல்கள் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கின.  

சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், கண்ணதாசன் சிறந்த கவிஞர் என பேசினார் இளையராஜா. அதே மேடையில் இளையராஜா முன்னிலையிலேயே எம்.எஸ் விஸ்வநாதன் தான் சிறந்த இசையமைப்பாளர் என பதிலடி கொடுத்தார் வைரமுத்து. அதோடு முடிந்தது என நினைத்தால், இப்போது மீண்டும் இளையராஜாவை மறைமுகமாக அட்டாக் செய்துள்ளார் வைரமுத்து. சமீபத்தில் தான் இசையமைத்த பாடல்களுக்கு காப்புரிமை கோரி வழக்குத் தொடர்ந்திருந்தார் இளையராஜா.  

இந்த வழக்கு விசாரணையில் இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இளையராஜா எல்லாருக்கும் மேலானவர் தான்” என கூறியது சர்ச்சையானது. இது ஒருபக்கம் இருக்க, பிரஜின், யாஷிகா ஆனந்த் நடித்துள்ள படிக்காத பக்கங்கள் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்து கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், இளையராஜாவை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.  

அதாவது “இசையும் கவிதையும் சேர்ந்தால் தான் அது பாடல்; அது இல்லை என்று சொல்பவர் அஞ்ஞானி” எனக் கூறியுள்ளார். இதில் அஞ்ஞானி என்ற சொல், இசைஞானியை நேரடியாகவே குறிப்பிடுவதாக உள்ளது. மேலும், திரைப் பாடல்கள் என்பது வெறும் இசை மட்டுமல்ல, அதில் வரிகளும் இருந்தால் தான் பாடலாகும் என்பதாக வைரமுத்து பதிலடி கொடுத்துள்ளார். ”இசை பெரியதா… பாடல் பெரியதா..? என்ற விவாதம் தற்போது சினிமா ரசிகர்களிடம் விவாதமாகியுள்ளது.  

இசையும் வரிகளும் இணைந்திருந்தால் தான் நல்ல பாடல்கள் உருவாகும். ஒருவரை அவரது பெயரை வைத்து தான் பிரேமா என்றோ சங்கர் என்றோ அழைக்கிறோம். பெயரே இல்லை என்றால் எப்படி அழைப்போம், வெறும் இசை மட்டுமே இருந்தால் அந்தப் பாடலை அடையாளம் காண முடியுமோ..?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல், “காலம் கடந்தும் பாடல்கள் நிற்பதற்கு காரணம்  இசை மட்டும் தானா? கண்ணதாசனின் வரிகளில் உருவான பாடல்களை எந்தவொரு இசையும் இல்லாமல் பாட முடியாதா? பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார், மருதகாசி, உடுமலைப்பேட்டை நாராயண கவி, ஆலங்குடி சோமு உள்ளிட்ட பல கவிஞர்கள் தமிழ் சினிமாவுக்கு கருத்துள்ள பாடல்களை கொடுத்து காலம் கடந்தும் நிற்கின்றனர்” என்றுள்ளார்.  

தனுஷ் நடிப்பில் இளையராஜா பயோபிக் விரைவில் உருவாகவுள்ளது. இந்த நிலையில் இளையராஜாவின் கருத்துக்கு வைரமுத்து மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow