விளவங்கோடு தொகுதிக்கு ஏப்ரல் 19-ல் இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சட்டமன்ற உறுப்பினர் பதவியை விஜயதரணி ராஜினாமா செய்த நிலையில் விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தல்.

Mar 16, 2024 - 19:57
Mar 16, 2024 - 20:01
விளவங்கோடு தொகுதிக்கு ஏப்ரல் 19-ல் இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்  வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறும் எனவும் திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் விஜயதரணி போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதரணி, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். இதனால், அவர் பதவி வகித்து வந்த விளவங்கோடு தொகுதி காலியானதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. 

இந்த நிலையில் 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, 


மார்ச் 20 - வேட்புமனு தாக்கல்
மார்ச் 27 - வேட்புமனு தாக்கல் நிறைவு
மார்ச் 28 - வேட்புமனு பரிசீலனை
மார்ச் 30 - வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள்
ஏப்ரல் 19 - வாக்குப்பதிவு
ஜூன் 4 - வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதரணி பாஜகவில் இணைந்துள்ள நிலையில், விளவங்கோடு தொகுதியின் அடுத்த சட்டமன்ற உறுப்பினராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என தமிழ்நாடு முழுவதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.. 

மேலும், நாடு முழுவதும் 13 மாநிலங்களில் காலியாக உள்ள 26 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow