NEET போராட்டத்தில் களமிறங்கும் திரைப்பிரபலங்கள்... !
நீட் எதிர்ப்பு மாணவர் போராட்டத்திற்கு கமல்ஹாசன், மாரி செல்வராஜ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர் தலைமையில் சென்னையில் போராட்டம் நடைபெற உள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு திரையுலகப் பிரபலங்களின் ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்திற்கு நடிகரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், "ஒரு குழந்தை அழுதபோதே நாம் செவிகொடுத்திருக்க வேண்டும். கற்றலுக்குப் பதிலாக பயிற்சியும், ஆர்வத்திற்குப் பதிலாக பதட்டமும், தகுதிக்குப் பதிலாக குற்றச்செயல்களும் நிறைந்த அமைப்பு அழுகிப்போயுள்ளது. மாணவர்கள் பதில்களுக்குப் பதிலாக தடியடிகளை எதிர்கொள்வது ஒரு நாட்டின் தோல்வி. இந்திய மாணவர்களின் கனவுகள் எங்கள் தோல்விகளை விட பெரியதாக இருக்கட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கையும் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில், நீட் தேர்வுக்கு எதிராக இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன் மற்றும் அமீர் தலைமையில் இன்று மாலை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் கண்டனப் போராட்டம் நடைபெறவுள்ளது.
இதேபோல் இயக்குநர் மாரி செல்வராஜும், "அதிகார அடக்குமுறைக்கு எதிரான குரலுக்கு வலு சேர்ப்பதே என் கலையின் நேர்மை. நீட் எனும் ஆணவப் போக்கிற்கு எதிராகப் போராடும் இந்திய மாணவர்களின் கைகளோடு கைகோர்த்து உறுதியாக நிற்கிறேன்" என்று தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
மாணவர்களின் நீட் எதிர்ப்பு போராட்டத்திற்கு அரசியல் தலைவர்களைத் தொடர்ந்து திரைப்பிரபலங்களும் நேரடியாக ஆதரவு தெரிவித்து போராட்டக் களத்தில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?