அங்கன்வாடி மையம் கட்ட விடாத திமுக நிர்வாகி.. பரமக்குடியில் கொந்தளிக்கும் மக்கள்

Apr 23, 2024 - 17:34
அங்கன்வாடி மையம் கட்ட விடாத திமுக நிர்வாகி.. பரமக்குடியில்  கொந்தளிக்கும் மக்கள்

பரமக்குடி அருகே அங்கன்வாடி மையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வரும் திமுக ஒன்றிய செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த பாப்பார்கூட்டம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மைய கட்டடம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இதற்கு நயினார்கோவில் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் சக்தி மற்றும் அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சக்தி மற்றும் அவரது உறவினர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் மூடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள், கூட்டமாக சென்று பரமக்குடி வட்டாட்சியர் சாந்தியிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். 

அந்த மனுவில், அங்கன்வாடி மையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வரும் நயினார்கோவில் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் சக்தி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பணிகளை விரைவுபடுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் சாந்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக பாப்பார்கூட்டம் கிராம மக்களுக்கு உறுதி அளித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow