மண்ணுக்குள் சேர்ந்த காதல்.. ஆணவப்படுகொலை சம்பவத்தில் உருக்கம்.. காதலன் கல்லறை அருகே காதலி உடல் அடக்கம்..

Apr 27, 2024 - 12:44
மண்ணுக்குள் சேர்ந்த காதல்.. ஆணவப்படுகொலை சம்பவத்தில் உருக்கம்.. காதலன் கல்லறை அருகே காதலி உடல் அடக்கம்..

சென்னையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட பிரவீனின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகிலேயே, அவரது காதல் மனைவி ஷர்மிளாவின் உடலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. 

சென்னை பள்ளிக்கரணையில், கடந்த பிப்ரவரி 24-ம் தேதி இரவு 8 மணி அளவில், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பிரவீன் என்பவர், மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்ததில், அவர் ஆறு மாதங்களுக்கு முன்பு ஷர்மிளா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டதும், அவர் பட்டியலினத்தவர் என்பதால் ஷர்மிளாவின் உறவினர்கள் பிரவீனை ஆணவப் படுகொலை செய்ததும் தெரிய வந்தது. 

இதன் அடிப்படையில், ஷர்மிளாவின் அண்ணன் தினேஷ் என்ற குட்டி அப்பு உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், அவர்களிடம் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஷர்மிளா, கடந்த 14-ம் தேதி, அம்பேத்கர் நகரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். அப்போது அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்கொலைக்கு முயன்றபோது, கழுத்துப் பகுதியில் இருந்த நரம்புகள் பாதிக்கப்பட்டதால், ஷர்மிளா கோமா நிலைக்குச் சென்றார். இதையடுத்து அவரை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், கடந்த 22-ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனிடையே, ஷர்மிளா எழுதியதாக வெளியான தற்கொலைக் கடிதத்தில், தனது மரணத்திற்கு பெற்றோர்கள் துரை, சரளா மற்றும் நரேஷ், தினேஷ் ஆகிய 4 பேர் மட்டுமே காரணம் என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, ஷர்மிளாவின் பெற்றோர் மற்றும் ஷர்மிளாவின் அண்ணன்களான நரேஷ், தினேஷ் ஆகியோரிடம் போலீசார் மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

இந்த நிலையில், இருவரது மரணத்திற்கும் நீதி கேட்டு ஷர்மிளாவின் உடலை வாங்க மறுத்து பிரவீனின் குடும்பத்தினர் 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, அவர்களது வீட்டில் இறுதிச் சடங்கு நடைபெற்றது. வாழ வந்த பெண்ணை இப்படி இழந்துவிட்டோமே என்று பிரவீனின் பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதன் பின்னர், பள்ளிக்கரணையில் பிரவீனின் உடல் அடக்கம் செய்யப்பட்டதற்கு அருகிலேயே ஷர்மிளாவின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. 

ஆயிரம் கனவுகளோடு கரம் பிடித்த இந்த ஜோடியின் காதல், இப்போது மண்ணுக்குள் மறைந்துவிட்டது. சாதியால் வீழ்த்தப்பட்ட பிரவீன் – ஷர்மிளாவின் காதல் இனி விண்ணுலகத்திலாவது எந்தத் தடையும் இன்றி ஒன்று சேரட்டும். அவர்களின் மரணத்திற்கு உரிய நீதி கிடைத்து, இதுபோன்ற கொடூர ஆணவக் கொலைகளுக்கு பிரவீன் – ஷர்மிளாவின் மரணமே முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது…

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow