ஆட்சியர்களுக்கு சம்மன்: அமலாக்கத்துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
அமலாக்கத்துறை எந்த அடிப்படையில் நடவடிக்கை எடுத்தது. அதற்கான ஆதாரங்கள் என்ன?
![ஆட்சியர்களுக்கு சம்மன்: அமலாக்கத்துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி](https://kumudam.com/uploads/images/202311/image_870x_655ef67ecff4c.jpg)
மணல் கொள்ளை தொடர்பாக அமலாக்கத்துறை எந்த அடிப்படையில் ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியது? அதற்கான ஆதாரங்கள் என்ன? சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியுமா? என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம் நாளை (நவ 28) வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது.அதைத்தொடர்ந்து சட்டவிரோத பண பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த செப்டம்பர் 12ம் தேதி ஒரே நேரத்தில் 34 இடங்களில் சோதனை நடத்தினர்.
இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்த இந்த சோதனையில் மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் வீடுகளில் இருந்து கணக்கில் வராத பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், 12.82 கோடி ரூபாய் ரொக்க பணம், 56.86 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,024 கிராம் தங்கம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இந்த சோதனையை தொடர்ந்து 10 மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திலகம் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக கூறி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது.
இந்த சம்மனை தொடர்ந்து நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சில முக்கிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகியிருந்தார்.இந்த பின்னணியில் மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் என 5 மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
அந்த மனுவில், குஜராத், உத்தரபிரதேசம், மத்திய பிரதேச மாநிலங்களில் ஆயிரக்கணக்கான கனிம வள கொள்ளை தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள போது, அங்கு நடவடிக்கை எடுக்காமல், தமிழகத்தில் நடவடிக்கை எடுத்து அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாநில நிர்வாகத்தை சீர்குலைக்கும் வகையில் அமலாக்க துறை செயல்படுவதாகவும், சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் கனிமவள சட்டம் சேர்க்கப்படாத நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத்துறைக்கு அதிகார வரம்பு இல்லை என்றும் கூறப்பட்டிருக்கிறது.
கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக, அதிகார பரவலை மீறும் வகையில்,மாநில அரசு அதிகாரிகளை துன்புறுத்தும் நோக்கிலும், அரசு நிர்வாகத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கிலும் அமலாக்கத் துறை செயல்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பாக மாநில அரசே விசாரித்து வரும் நிலையில்,மாநில அரசு, புலன் விசாரணை அமைப்புகள் கோரிக்கை விதித்திருந்தாலோ, நீதிமனறம் உத்தரவிட்டிருந்தாலோ மட்டும் தான் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க முடியும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.மத்திய ஆளுங்கட்சி, ஆட்சி செய்யாத மாநிலங்களில் அமலாக்கத் துறையினரின் அதிகாரத்தை பயன்படுத்தி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன எனவும், குறிப்பிட்டு குவாரிகளின் விவரங்களை மட்டும் கோராமல், மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரிகளின் விவரங்களை கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசின் அனுமதியில்லாமல் அமலாக்கத் துறை மேற்கொள்ளும் இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்,மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆட்சியர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மணல் கொள்ளை தொடர்பாக அமலாக்கத்துறை வேறு எந்த மாநிலத்திலும் நடவடிக்கை எடுக்கவில்லை.
அமலாக்கத்துறை தவறான நடவடிக்கை எடுத்து வருகிறது. அமலாக்கத்துறை வேறு ஒருவர் கைப்பாவையாக செயல்படுகிறது. எந்த ஊழலும் நடைபெறவில்லை. யாரோ ஒருவர் தனியார் தவறு செய்திருந்தால் அதற்காக அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்களா? நிதி நிறுவனம், வங்கிகள், இடைத்தரகர்கள் சட்டவிரோத பண நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால் மட்டுமே அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க முடியும். அமலாக்கத்துறை எந்த அறிவிப்பும் வெளியிடாமல், ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியது சட்டவிரோதமானது என தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள், வழக்கு பதிவு செய்யப்பட்டும் தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்காததால், அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது எப்படி சட்ட விரோதமாக கருத முடியும் என மனுதாரருக்கும், அமலாக்கத்துறை எந்த அடிப்படையில் நடவடிக்கை எடுத்தது. அதற்கான ஆதாரங்கள் என்ன? சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியுமா? என அமலாக்கத்துறைக்கு கேள்வி எழுப்பினர்.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வரக்கறிஞர், நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. தொடர் விசாரணையில் நடத்தினால் மட்டுமே உண்மை ஆவணங்களை திரட்ட முடியும் என தெரிவித்தார்.இதையடுத்து, வழக்கின் தீர்பபை நாளை (நவ 28) வழங்கப்படும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
What's Your Reaction?
![like](https://kumudam.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudam.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudam.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudam.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudam.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudam.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudam.com/assets/img/reactions/wow.png)