வட்டிக்கு பணம் கொடுத்த பெயிண்டர்.. பேச அழைத்து சென்று போட்டு தள்ளிய மர்ம நபர்கள்.. கோவில்பட்டியில் பரபரப்பு

May 10, 2024 - 12:25
வட்டிக்கு பணம் கொடுத்த பெயிண்டர்.. பேச அழைத்து சென்று போட்டு தள்ளிய மர்ம நபர்கள்.. கோவில்பட்டியில் பரபரப்பு

கோவில்பட்டியில் பெயிண்டர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. 42 வயதான இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர் பெயிண்டர் மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல்  தொழில் செய்து வந்ததாக தெரிகிறது. 

இந்நிலையில் நேற்று (மே 9)  இரவு வீரவாஞ்சி நகரில் உள்ள தனது தாய் மாரியம்மாள் வீட்டில் முத்துப்பாண்டி இருந்தபோது அவரைத் தேடி சிலர் வந்தனர். கொஞ்சம் பேச வேண்டும் என்று கூறி அவரை வெளியே அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு அருகே முத்துப்பாண்டி பாட்டிலால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து முத்துப்பாண்டியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், முத்துப்பாண்டியை தேடி வந்த நபர்கள் யார்?.. முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா?.. பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் கொலை செய்யப்பட்டாரா?.. என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

நேற்று முன்தினம் ( மே 8)  டாஸ்மாக் பாரில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது பெயிண்டர் முத்துப்பாண்டியும் கொலை செய்யப்பட்டுள்ளார். தொடர் கொலைகளால் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow