காங்கிரஸிற்கு ஒரு ராஜ்யசபா சீட்... Confirm செய்த விஜய்..!
தமிழ்நாட்டில் விரைவிலேயே மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஒரு ராஜ்யசபா சீட்டை காங்கிரஸிற்கு ஒதுக்கி அறிக்கை வெளியிட்டுள்ளது தமிழக வெற்றிக் கழகம்.
நாடு முழுவதும் மாநிலங்களவை எம்.பி.க்கள் 24 பேரின் 6 ஆண்டு பதவிக் காலம் 2026 ஜூன், ஜூலை மாதங்களில் முடிவடைகிறது. இதனால், அந்த இடங்களுக்கு ஜூன் 18-ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சி.வி.சண்முகம் உட்பட 3 பேர் மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளதால், 3 இடங்களுக்கு அதே நாளில் இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு சி.வி.சண்முகம் வெற்றி பெற்றதால், அவர் தனது ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றிய தவெகவிற்கு 2-3 மாநிலங்களவை எம்.பிக்கள் கிடைக்கும் பட்சத்தில், அதில் ஒன்றை கேட்டு காங்கிரஸ் டிமாண்ட் வைத்துள்ளதாகவும், அதுதொடர்பாகத்தான் இன்று(ஜூன் 03) காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் விஜய்யை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், ஒரு ராஜ்யசபா சீட்டை காங்கிரஸிற்கு ஒதுக்குவதாக தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இம்மாதம் 18ஆம் தேதி தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ள மாநிலங்களவை (Rajya Sabha) உறுப்பினருக்கான தேர்தலில், தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் (Rajya Sabha Seat) இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?