என்னது “மன்மத நன்றி”யா?... வைரலாகும் தவெக எம்.எல்.ஏ வீடியோ..!
கவுண்டம்பாளையம் தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷின் முதல் சட்டப்பேரவை உரை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முதன்முறையாக சட்டப்பேரவையில் பேசிய கனிமொழி சந்தோஷ், முதலமைச்சர் விஜய்யை பாராட்டியதுடன், பெண்களின் பாதுகாப்பு தொடர்பான அரசின் நடவடிக்கைகளை எடுத்துரைத்தார். அப்போது விஜய் நடித்த ‘பீஸ்ட்’, ‘வேட்டைக்காரன்’, ‘காவலன்’ உள்ளிட்ட திரைப்படங்களின் பெயர்களை பயன்படுத்தி, பெண்களின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்து தனது கருத்துகளை தெரிவித்தார்.
தொடர்ந்து தனது கவுண்டம்பாளையம் தொகுதி மக்களின் நீண்டகால பிரச்னைகள் குறித்து அவர் சட்டப்பேரவையில் கோரிக்கைகளை முன்வைத்தார். அரசு புறம்போக்கு நிலங்களில் பல ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பட்டா இல்லாததால் அவர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை வசதிகளை மேம்படுத்துவதுடன், விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் இந்த மருத்துவமனை முக்கியமானதாக இருப்பதால், தேவையான மருத்துவ உபகரணங்களை விரைவாக வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இறுதியில், பேச வாய்ப்பு வழங்கிய சபாநாயகருக்கு நன்றி தெரிவித்தபோது, ‘மனமார்ந்த நன்றி’ என்பதற்கு பதிலாக எதிர்பாராதவிதமாக ‘மன்மத நன்றி’ என அவர் கூறினார். இதுதொடர்பான வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
What's Your Reaction?