தமிழக ஆளுநர் மாற்றமா? – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேச்சு!

தமிழக ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி மாற்றம் செய்யப்பட உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் குறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து தெரிவித்துள்ளார். 

Oct 21, 2024 - 13:29
தமிழக ஆளுநர் மாற்றமா? – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேச்சு!

சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “விசிக தலைவர் திருமாவளவன் என்னை ஆர்எஸ்எஸ் சேர்ந்தவர் எனத் தெரிவித்தார். நான் ஆர்எஸ்எஸ் சேர்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன். நான் ஒரு ஆர்எஸ்எஸ் சங்கி என்பதில் பெருமிதம் கொள்கிறேன்” என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், “அருந்ததியினருக்கு இட ஒதுக்கீடு ஏன் வழங்க வேண்டும் என்பது தொடர்பாக தகவலை கொடுத்தவன் நான். அருந்ததியினர் மக்களுக்கான இட ஒதுக்கீடு எளிதாக கிடைக்கவில்லை. அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த இட ஒதுக்கீடு.

கடைநிலையில் இருக்கும் மக்களுக்கும் அரசியல் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பது அந்தியோதயா என்பதன் பொருள். அனைத்து தரப்பு மக்களுக்கும் இட ஒதுக்கீடு சென்று சேர வேண்டும் என்பதே எங்கள் கொள்கை. விசிக தலைவர் திருமாவளவன் கடந்த கால தேர்தல் வரலாற்றில் அவரது கட்சி சார்பாக போட்டியிட அருந்ததியினருக்கு வாய்ப்பு கொடுத்திருந்தாரா ? சனாதானத்தையும் ஆன்மீகத்தையும் நாங்கள் ஆதரிப்போம்” என்று எல்.முருகன் பேசினார். 

மேலும், தமிழக ஆளுநர் மாற்றப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது குறித்து பதிலளித்த அவர் “தமிழக ஆளுநர் மாற்றப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி வருவது குறித்து யூகங்களுக்கு பதில் தெரிவிக்க விரும்பவில்லை, தமிழக ஆளுநர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow