இது Scam மக்களே! தென்னக ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக மோசடி

மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 10 லட்சம் ரூபாய் ஆட்டையைப் போட்ட புகாரில் 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

Sep 29, 2024 - 20:51
இது Scam மக்களே! தென்னக ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக மோசடி


மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 10 லட்சம் ரூபாய் ஆட்டையைப் போட்ட புகாரில் 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

சென்னை அம்பத்தூர் ஒரகடம் பகுதியை சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளி ராமகிருஷ்ணன். வெள்ளிக் கிழமைகளில் அங்குள்ள அங்காளம்மன் கோயிலுக்கு சென்றுவரும் ராமகிருஷ்ணனுக்கு, வெள்ளானூர் பகுதியை சேர்ந்த எம்.விஜய் என்பவர் பழக்கமாகி, தான் கல்லூரி பேராசிரியராக பணி செய்வதாகவும் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து இருவரும் நட்பாகப் பழகிவந்த நிலையில், ராமகிருஷ்ணன், தனது சகோதரி மகனுக்கு வேலை தேடுவதாக தெரிவித்துள்ளார். அப்போது தனது நண்பர் ஆர். விஜய் என்பவர் ரயில்வே துறையில் இருப்பதாகவும், அவர் ஏதாவது வேலை வாங்கித் தருவார் என்றும் கூறி, ராமகிருஷ்ணனுக்கு அவரை பேராசிரியர் விஜய் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். 

இதன் பின்னர் ஆர். விஜயிடம்,  ராமகிருஷ்ணன் பேசியபோது, ரயில்வே தொழிற்சங்க தலைவராக இருப்பதாகக் கூறி, கௌரவ குமார் என்பவரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அப்போது, தென்னக ரயில்வேயில் டி.டி.ஆர். வேலைவாய்ப்பு இருப்பதாகவும், 10 லட்சம் ரூபாய் கொடுத்தால் வேலை வாங்கித் தருவதாகவும் கௌரவகுமார் கூறியிருக்கிறார். இதையடுத்து, ராமகிருஷ்ணன், பேராசிரியர் விஜய், ஆர். விஜய், இவர்களின் நண்பர் வினோத் ஆகியோரின் ஜி பே மூலமாக 10 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார்.

ஆனால், பணம் கொடுத்தும் வேலை வாங்கிக் தராததால், ராமகிருஷ்ணன் கௌரவ குமாரை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்துள்ளது. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, 4 பேர் மீதும், ஆவடி காவல் ஆணையரகத்தில் ராமகிருஷ்ணன் புகார் அளித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கௌரவகுமார் மோசடிக்கு மூளையாகச் செயல்பட்டது தெரியவந்தது. அவர் தலைமறைவாகி உள்ள நிலையில், மோசடிக்கு உடந்தையாக செயல்பட்ட M.விஜய், R.விஜய், வினோத் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி 10 லட்சம் ரூபாயை ஏமாற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow