ஜாமின் தரக் கூடாது.. ஹை கோர்ட்டில் வாதங்களை அடுக்கிய அமலாக்கத்துறை..! சிக்கலில் செந்தில் பாலாஜி?

Feb 15, 2024 - 18:14
Feb 15, 2024 - 19:45
ஜாமின் தரக் கூடாது.. ஹை கோர்ட்டில் வாதங்களை அடுக்கிய அமலாக்கத்துறை..! சிக்கலில் செந்தில் பாலாஜி?

செந்தில் பாலாஜி தரப்பில் குற்றம் சாட்டுவதை போல் எந்த ஆவணங்களும் திருத்தப்படவில்லை எனவும், அவருக்கு ஜாமின் வழங்கக்கூடாது எனவும்  சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ள நிலையில், செந்தில்பாலாஜி தரப்பு பதில் வாதத்திற்காக வழக்கு விசாரணை பிப்ரவரி 19 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை ஜனவரி 12.ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. கைதாகி 250 நாட்கள் கடந்த நிலையில், ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இரண்டாவது முறையாக மனுத்தாக்கல் செய்துள்ளார்.

 அதில், வழக்கு ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளதா? என்பதை விசாரணையில் தான் நிரூபிக்க முடியும் என முதன்மை அமர்வு நீதிமன்றம் கூறியது தவறு என மனுவில் கூறப்பட்டிருந்தது.  சந்தர்ப்ப சூழ்நிலை மாறவில்லை, சகோதரர் அசோக்குமார் தலைமறைவாக உள்ளார் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கூறிய நிலையில், ஆவணங்கள் திருத்தப்பட்டதே, சந்தர்ப்ப சூழ்நிலை மாற்றமாகக் கருதுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டது. 

இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான், வழக்கின் விசாரணையை தாமதப்படுத்தி வருவதாகவும், வழக்கின் விசாரணையை துவங்க அமலாக்கத் துறை தயாராக இருக்கும் நிலையில், செல்வாக்கான அவருக்கு ஜாமின் வழங்கினால் சாட்சிகளை அச்சுறுத்தக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஒரே காரணத்தை அடிப்படையாக வைத்து மீண்டும் இந்த ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி உள்ள அமலாக்கத் துறை, செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆரம்பகட்ட ஆதாரங்கள் இருப்பதாக முதன்மை அமர்வு நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளன.

 வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இன்னும் தலைமறைவாக உள்ளார். ஆவணங்களை திருத்தியதாக செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டு தவறு எனவும் பதில் மனுவில் கூறப்பட்டிருந்தது.  மேலும் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து, வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், "சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டம் 45-வது பிரிவின்படி, குற்றம் புரிந்திருக்கவில்லை என நீதிமன்றம் திருப்தியடையும் வகையில் நிரூபிக்க வேண்டும். செந்தில் பாலாஜிக்கு எதிராக பதியப்பட்ட வழக்கில் நியாயமான சந்தேகம் உள்ளது. டிஜிட்டல் ஆதாரங்கள் திருத்தப்பட்டுள்ளது குறித்து விசாரணையின் போது தான் நிரூபிக்க முடியும் என அமர்வு நீதிமன்றம் கூறியது தவறு.  திருத்தப்பட்ட ஆதாரங்களை நீக்கி விட்டால் செந்தில் பாலாஜிக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை என்பதால் சந்தேகத்துக்கு இடமின்றி அவர் விடுதலை செய்யப்பட வேண்டும்" என வாதிட்டார்.

அமலாக்கத் துறையின் மொத்த வழக்கும், சோதனையின் போது பறிமுதல் செய்த பென் டிரைவ் மற்றும் ஹார்டு டிஸ்க் அடிப்படையிலேயே உள்ளது. சோதனையின் போது ஐந்து மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்த நிலையில், நீதிமன்றத்தில் வேறு மின்னணு சாதனங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. பறிமுதலுக்கு பின், அந்த மின்னணு சாதனங்களில்  67 பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சோதனைக்கு பின் பென் டிரைவ் குறித்த  அறிக்கையில் 284 கோப்புகள் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. பின்னர் அந்த பென் டிரைவ் குறித்த மற்றொரு அறிக்கையில் 472  கோப்புகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையின் ஆதாரங்கள் திருத்தப்பட்டுள்ளன.  இந்த ஆதாரங்களுக்கு என்ன மதிப்பு உள்ளது. ஆதாரங்கள் திருத்தம் தொடர்பாக தற்போது நிரூபிக்க முடியாத நிலையில் விசாரணை முடியும் வரை சிறையில் இருக்க வேண்டுமா? என ஆர்யமா சுந்தரம் கேள்வி எழுப்பினார்.

மேலும் "பறிமுதலுக்கு பின் பென் டிரைவ், ஹார்டு டிஸ்கில் இருந்த கோப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. புதிய கோப்புகள் அதில் உருவாக்கப்பட்டுள்ளன என்பது தடயவியல் ஆய்வில் தெரியவந்துள்ளது.  கையெழுத்து இல்லாத கடிதங்களை அமலாக்க துறை ஆதாரங்களாக சேர்த்துள்ளன. பணத்தை வசூலித்து உதவியாளர் சண்முகத்திடம் வழங்கியதாகக் கூறுகிறார்கள். ஆனால் சண்முகம் உதவியாளரே அல்ல. சட்டவிரோதமாக எந்த பண பரிமாற்றமும் நடைபெறவில்லை. கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை செந்தில் பாலாஜி வங்கிக் கணக்கில் ஒரு கோடியே 34 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்யப்பட்டுள்ள நிலையில் அது குற்றம் மூலம் ஈட்டப்பட்டது எனவும் அமலாக்க துறை தெரிவித்துள்ளது. இதுசம்பந்தமாக வருமான வரித்துறைக்கு முறையாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதில் 64 லட்சம் ரூபாய் சம்பளமாக பெறப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கில் 58 லட்சம் எடுக்கப்பட்டது. இத்தொகை தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்குக்காக எடுக்கப்பட்டு, பின் அத்தொகை வேறு கணக்கில் இருந்து டிபாசிட் செய்யப்பட்டது என்றார்.

பொருளாதார குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமின் மறுக்கப்படக் கூடாது என உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளது.  இலாகா அமைச்சராக நீடிப்பதாலும், சாட்சிகள் அச்சுறுத்தப்படலாம் என்பதாலும், ஜாமின் கொடுத்தால் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளது என்பதாலும், சந்தர்ப்ப சூழலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை எனவும் கூறி ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. தற்போது செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை. புலன் விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. வெளிநாடுகளுக்குப்தப்பி விடுவார் என்றால் யாருக்கும் ஜாமின் வழங்க முடியாது. தற்போது அமைச்சராக இல்லாத காரணத்தால் சந்தர்ப்ப சூழல் மாறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாக இருக்கிறார் என்பதற்காக ஜாமின் மறுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்பதால் ஜாமின் வழங்க வேண்டும் என்று வாதத்தை ஆர்யமா சுந்தர் நிறைவு செய்தார்.

தொடர்ந்து அமலாக்க துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன்,  "எந்த ஆதாரங்களும் திருத்தப்படவில்லை. ஆவணங்கள் அனைத்தும் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து தான் பெறப்பட்டன" என பதில் வாதத்தை முன்வைத்தார். பின்னர் அமலாக்கத்துறை வாதத்திற்காக விசாரணை வியாழக்கிழமை பிற்பகலுக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒத்தி வைத்தார். இந்நிலையில் மூன்றாவது நாளாக ஆஜராகி வாதத்தை முன்வைத்த  அமலாக்கத்துறை, "செந்தில் பாலாஜி தரப்பில் குற்றம் சாட்டுவதை போல் எந்த ஆவணங்களும் திருத்தப்படவில்லை. 

அனைத்து ஆவனங்களும் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து தான் உரிய அனுமதியுடன் பெற்றோம். செந்தில் பாலாஜியிடமிருந்து பென் டிரைவ் மற்றும் ஹார்டு டிஸ்க் ஆகியவற்றை மத்திய குற்றப்பிரிவு பறிமுதல் செய்து சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. பதவிக்கு ஏற்றவாறு, 2 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரை என மொத்தம், 67 கோடி  வசூலித்து மோசடி செய்துள்ளனர். செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தவிர தற்போது வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 

ஜாமின் மனு விசாரணை துவங்குவதற்கு ஒரு நாள் முன் தான் ராஜினாமா செய்துள்ளார். சாட்சிகள் இன்னும்   விசாரிக்கப்படாத நிலையில்  ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைக்க கூடும். 30 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர் ஜாமினில் விடுதலையானால் எந்த குற்றத்திலும் ஈடுபட மாட்டார் என நம்ப எந்த காரணமும் இல்லை. சாட்சி விசாரணை துவங்க அமலாக்க துறை தயாராக உள்ளது. நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்காத அவருக்கு ஜாமின் வழங்க கூடாது" என தெரிவித்தது. இதனை பரிசீலித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், செந்தில்பாலாஜி தரப்பு பதில் வாதத்திற்காக வழக்கு விசாரணை பிப்ரவரி 19 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow